முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு குழு பரிந்துரைத்த குறைந்த பட்ச கட்டணம் ரூ.40-ஐ ஏற்க ஆட்டோ சங்கங்கள் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Auto-Associations 2022 06 1

Source: provided

சென்னை : அரசுக்கு குழு பரிந்துரைத்த குறைந்த பட்ச கட்டணம் ரூ.40-ஐ ஏற்க ஆட்டோ சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25ஆக தமிழக அரசு நிர்ணயித்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் என்று வசூலிக்கப்பட்டது. மேலும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்பிறகு விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ டிரைவர்கள் கைவிட்டனர். மேலும் தனியார் செயலி நிறுவனங்களும் கட்டணங்களை நிர்ணயித்து ஆட்டோக்களை இயக்கின. இதை பயன்படுத்தி அந்த நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலிக்க தொடங்கி உள்ளன. 

இந்தநிலையில் தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து டிஜிட்டல் மீட்டர்களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் டிரைவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையே ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ தொழிற் சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலில் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி 1.5 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18 ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்தநிலையில் குழு பரிந்துரைத்த கட்டண உயர்வை ஏற்க ஆட்டோ டிரைவர்கள் மறுத்து விட்டனர். சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சம் ரூ.40 என்பதை ஏற்க மறுக்கிறார்கள். 

இதுகுறித்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கூறியதாவது:- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நேரத்துக்கும், தூரத்துக்குமான வேறுபாடுகளை ஒப்பிட்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும், கூடுதலாக 1 கி.மீட்டருக்கு ரூ.20 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். 

இதற்கான செயலியை உருவாக்கி அரசே இதை கண்காணித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும். ஜி.பி.எஸ். கருவிகளை பயன்படுத்தி தூரத்தை பதிவு செய்யலாம். இதனால் கட்டணம் தொடர்பாக பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை தடுக்க முடியும். 9 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கட்டணங்களை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து