முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர் ஓய்வூதிய விவகாரம்: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும், முதியோர் உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. 

தற்போது ஓய்வூதியம் பெறும் முதியோரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக் கடன் பெற்று இருந்தாலோ, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோர் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனவே, முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து