முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
CM-1 2022-06-14

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும்,  பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியமாகும்.  தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன் பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.   

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துதல், 2021-22ஆம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, அனைத்து  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு எதிர்காலத் தேவையினை பூர்த்தி செய்திட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். பயிற்றுநர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்கிட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தற்போது 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள M/s. TATA Technologies Ltd., நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.  இதன்மூலம், ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங்,  இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு வெல்டிங் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.  

இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.கணேசன்,  தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.இராமதுரை, தலைமை நிதி அலுவலர் சவிதா பாலசந்திரன், தலைவர் (அரசு திட்டங்கள்)  சுசீல்குமார், மனிதவள மேலாண்மை தலைவர் பவன்பகேரியா, கல்வி மற்றும் திறன் மேம்பாடு இயக்குநர்  புஷ்கராஜ்கால்குட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து