முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
ADMK-Office-2022-06-16

Source: provided

சென்னை: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017-ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையும், கடிதத்தையும் தேர்தல் ஆணையம் கட்சிக்கு வழங்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை.

சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அ.தி.மு.கவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில், நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் சூரியமூர்த்தி அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

மனுதாரர் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நிராகரிப்பு மனு தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து