முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியில் இணைந்தனர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு: தப்புமா மகாராஷ்டிரா கூட்டணி அரசு ?

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
uddhav-thackeray-2022-06-23

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த அணியில் நேற்று மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் இணைந்தனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்த நிலையில் சுயேச்சைகள், பிறகட்சி எம்.எல்.ஏ.க்கள் என 23 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால் 3-வது எம்.பி. பதவியையும் பாஜக வென்றது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.

மேலவைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டப்பேரவைக் குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமாயினர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது.

ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 30 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத்திலிருந்த அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சூரத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியிருந்த சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மும்பை திரும்பினார். தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாகவும், தான் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி உள்ளது. இந்தநிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் தீபக் கேசர்கர், சதா சர்வாங்கர், மங்கேஷ் குடால்கர் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்துள்ளனர். இதனால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு சூரத்தில் இருந்து குவஹாட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியேறியவர்கள் சிவசேனா அல்ல. மும்பை தெருக்களில் நாம் பார்த்ததுதான் உண்மையான சிவசேனா. எங்கள் கட்சி பலமாக உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு விலகுவதால் நாங்கள் பலவீனமாகவில்லை. சுமார் 17-18 பேர் பாரதிய ஜனதா கட்சியின் காவலில் உள்ளனர். நாங்கள் 20 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து