முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மண்ணடியில் வாகன சோதனையில் சிக்கிய ரூ.2 கோடி ஹவாலா பணமா ? போலீஸ் விசாரணை

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
indian-rupee-2022-06-24

சென்னை மண்ணடியில் போலீஸ் வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர். 

சென்னை மண்ணடி பகுதியில் சென்னை துறைமுகம் போலீஸ் உதவி கமிஷனர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.2 கோடி பணம் இருந்தது. இதையடுத்து பணத்துடன் கார் மற்றும் அதில் இருந்த 2 பேரை மண்ணடி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் (வயது 46) மற்றும் நாராயணன் (45) என்பது தெரியவந்தது. சென்னையில் வியாபாரம் செய்வதற்காக பணத்துடன் வந்ததாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியை பறிமுதல் செய்த போலீசார், சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

மேலும் ஜெயசங்கர், நாராயணன் மற்றும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி ஹவாலா பணமா? என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து