முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இ.பி.எஸ். முறையீடு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
EPS-2022-04-14

Source: provided

புது டெல்லி : அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர் எம்.சண்முகம், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்களுக்காகவோ அ.தி.மு.க பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரக்கூடாது, என வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை கடந்த ஜூன் 22 நள்ளிரவில் விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஏற்கெனவே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்கள் குறித்தோ அல்லது கட்சி விதிகளில் திருத்தம் செய்வது குறித்தோ எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். அதையடுத்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி தரப்பில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் தலையீடு செய்து நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. அ.தி.மு.க. அவைத் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கருத்தை பொறுத்தே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படும். கட்சி விதிகளின்படி பொதுக்குழுவுக்கே அனைத்து அதி்காரங்களும் உள்ளது. அதன்படி, விதிகளை திருத்தம் செய்யவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி விட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து