முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கே வெற்றிச்சூத்திரம்தான் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி : திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
CM-3 2022 06 29

Source: provided

திருப்பத்தூர் : இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரம்தான் தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி என்றும், மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் தேடித்தேடி நிறைவேற்றி வரக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி என்றும் திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது, பதினான்காம் நூற்றாண்டில் திரு-வன-புரம் என்ற பெயரில் இருந்த ஊர்தான், திருப்பத்தூர் எனப் பெயர் மாற்றம் அடைந்து இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.  ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைத் தொடர்களால் சூழப்பட்ட, இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் இந்த மாவட்டம். 

இந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய 4 சட்டமன்ற தொகுதிகளை சார்ந்திருக்கக் கூடிய 16,820 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 103 கோடியே 42 லட்சத்து 92 ஆயிரத்து 445 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு தேவைகளையும் தேடித்தேடி நிறைவேற்றி வரக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. 

தி.மு.க. ஆட்சியில் தான், பல்வேறு திட்டங்களுக்கும் சேர்த்து ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு திட்டத்திற்கு ஒரு விழா எடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 365 நாளும், தனித்தனியாக நாம் விழா எடுத்தாக வேண்டும். அந்தளவுக்கு ஏராளமான திட்டங்கள், அந்தத் திட்டங்களை  நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமாக விளங்குவதால், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.  திருப்பத்தூர் மாவட்டத்தில், உயர்கல்வியில் பின்தங்கியுள்ள நாட்றாம்பள்ளி வட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கான கல்லூரி வசதிகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவசிய, அவசரமான திட்டங்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்து, அதனை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். அனைத்து மக்களின் வளர்ச்சி இது தான் திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு தனிமனிதருடைய தேவையையும் நிறைவேற்றியாக வேண்டும்.அந்த வகையில்தான் அனைத்து மக்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணத்தில் இருந்து இம்மியளவும் மாறாமல் இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போடும். அப்படி நடந்தால், ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாடு நிச்சயம் பெறும். ஒவ்வொரு திட்டத்தையும், தமிழக மக்களாகிய உங்கள் நலன் கருதியே இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 

உங்களின் வாழ்வு உயர, தமிழ்நாடும் உயரும். அத்தகைய பொற்காலத்தை உருவாக்குவதற்காகதான் எனது உடல்சோர்வைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். எனது சக்தியை மீறி உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தகைய ஆட்சிக் காலமானது தமிழ்நாட்டின் பொற்காலம். இந்தப் பொற்கால ஆட்சியைத் தொடர்வோம். இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக இதனை மலரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து