முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்: பாராளுமன்ற மழைக்கால கூட்டம் இன்று ஆரம்பம் : அக்னிபாத் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2022      இந்தியா
Parliament 2022-07-05

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை  தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் முக்கியமாக தொல்லியல் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் பகுதிகள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. வனப்பாதுகாப்பு சட்டத்தில் உள்ளது போன்ற அமலாக்க அதிகாரங்கள் தொல்லியல் துறைக்கு வழங்க இந்த மசோதா வகை செய்யும். 

இதை போல குடும்ப கோர்ட்டு திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ முதல் நாளிலேயே மக்களவையில் தாக்கல் செய்கிறார். பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் வினியோக முறைகள் (சட்டவிரோத செயல்களுக்கு தடை) திருத்த மசோதாவை மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தவிர வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, கண்டோன்மென்ட், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, திவால் குறியீடு திருத்த மசோதா போன்றவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியல் காபி (ஊக்குவித்தல் மற்றும் மேம்பாடு) மசோதா, புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) (திருத்தம்) மசோதா, கிடங்கு (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (திருத்தம்) மசோதா மற்றும் போட்டி (திருத்தம்) போன்ற மசோதாக்களும் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்று உள்ளன. மேலும் கலாஷேத்ரா அறக்கட்டளை திருத்தம், தேசிய பல் மருத்துவ கமிஷன் மசோதா, தேசிய நர்சிங் மசோதா, ஐ.ஐ.எம். திருத்த மசோதா, மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதா போன்ற மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கார் மாநிலங்களின் பழங்குடியினர் பட்டியலை திருத்துவதற்கான 2 மசோதாக்கள் உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் நடத்தினார். இதில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அவைத்தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, அக்னிபத், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும் இந்த பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் வழங்குமாறும் வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து