முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு வந்து 14 மாதமாகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
EPS-1 2022-08-08

Source: provided

ஈரோடு : ஆட்சிக்கு வந்து 14 மாதமாகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஈரோட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பிறகு முதன் முறை யாக ஈரோடு மாவட்டத்துக்கு வந்தார். நேற்று மதியம் பெருந்துறை வந்த அவருக்கு அதிமுக சார்பில் வாணவேடிக்கை தாரைதப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது., மக்கள் விரோத மக்களைப் பற்றி சிந்திக்காத தன் குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் ஆட்சி நடக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் 14 மாதமாகியும் நிறைவேற்றவில்லை. 

திமுக பல பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகள் கொடுத்து கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்தது. மகளிருக்கு மாதம்தோறும் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் கல்விக் கடன் ரத்து முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும் கேஸ் சிலிண்டருக்கு ரூ 500 மானியம் தரப்படும் என்றார்கள். பெட்ரோல் விலையில் ரூ 5 டீசலில் ரூபாய் 4  குறைக்கப்படும் என்றார்கள்.  பெட்ரோலுக்கு மட்டும் ரூபாய் 3 குறைத்தார்கள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது 25 மாநிலங்கள் விலையை குறைத்தன. ஆனால் இங்கு விலையை குறைக்கவில்லை. 

டீசல் விலை குறைந்தால் தான் பொருட்களின் விலை குறையும் ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மா ஆட்சியில்பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய் 1652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தை ஆமை வேகத்தில் நிறைவேற்றுகிறது திமுக அரசு.

ஆறு மாதம் முன்பே அது முடிந்திருக்க வேண்டும். அத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டிருக்கும் விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள் திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது. பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பெருந்துறைக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. 

ஈரோடு நகரம் ரூபாய் 1000 கோடி சீர்மிகு நகர திட்டத்தைப் பெற்றது பல சாலைகள் புதுப்பிக்கப்பட்டன ஏழை எளிய மக்கள் தங்கள் பகுதியிலேயே மருத்துவ வசதி பெற 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. இதைப் பொறுத்துக் கொள்ளாத திமுக அரசு அவைகளை மூடிவிட்டது. கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்று சட்டமன்றத்திலும் ஊடகம் மூலமாகவும் தெரிவித்தேன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இன்று பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும்சூழல் உருவாகியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நாங்கள் சட்டம் ஏற்றினோம்.  ஆனால் அது எதிர்த்த நிறுவனங்களின் வழக்கை சரிவர கையாளாததால் கோர்ட் புதிய சட்டம் இயற்ற அறிவுறுத்தியது. பலர் தற்கொலை செய்து கொண்டனர். சொத்துக்களை இழந்துள்ளனர். ஆனால் இதுவரை ஆன்லைன் ரம்மி தடை செய்து சட்டம் இயற்றவில்லை. மக்களிடம் கருத்து கேட்பதாக கூறுகிறார்கள். சூதாட்டத்தை ஒழிக்க மக்களிடமே கருத்து கேட்கும் ஒரே அரசு இந்த அரசு தான். விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சங்கர் உட்பட பலர் இதில்  கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து