முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் : நாற்றங்கால்களை கண்காணிக்க தனி இணையதளமும் துவக்கம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-2 2022--09-24

Source: provided

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது தெரிவித்த அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும்.  பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

 நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் போன்றவற்றை கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன. 

பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர், எண்ம நூல்கள்  போன்றவற்றை முதல்வர் பார்வையிட்டார்.  மேலும், இந்நிகழ்ச்சியின் போது, முதல்வர், பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றிய விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி சிறப்பித்தார். 

அதனைத் தொடர்ந்துமுதல்வரிடம் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பாக, ஹூண்டாய் இந்தியா மோட்டார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும், மணலி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 35 லட்சம் ரூபாயும், பசுமை  சுற்றுச்சூழல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாயும், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் 15 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 46 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது. முதல்வரால் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள்  தா.மோ. அன்பரசன்,  கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஜி.செல்வம், கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து