முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை: விதித்தது நெதர்லாந்து கோர்ட்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022      உலகம்
Netherland 2022-11-18

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

நெதர்லாந்தில் இருந்து கடந்த 2014, ஜூலை மாதம் 17-ம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷ்ய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதில், 15 விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷ்யாவும், பிரிவினைவாதிகளும் கூறின. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. 

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரஷ்யர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து