முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      உலகம்
Dina 2022 12 -09

பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்றார். 

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வை தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என கூறி அவர் நிராகரித்தார். 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிரடியாக அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் டெலிவிஷனில் தோன்றிப் பேசினார். நாட்டில் அவர் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கிற வகையில் அங்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப் போவதாகவும் அறிவித்தார். 

இந்த முடிவை எதிர்த்து அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு, அவர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கி உள்ளதாக குற்றம் சாட்டியது. அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுத்தது. 

அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பதவி ஏற்றார். 60 வயதான இவர் வக்கீல் ஆவார். அவர் 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப் போவதாக தெரிவித்தார். அப்போதுதான் முந்தைய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவிக்காலம் முடிய இருந்தது. பதவி ஏற்ற பின்னர் அதிபர் டினா பேசும் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். 

இந்த நிலையில் பெரு நாட்டின் போலீஸ் துறையும், ஆயுதப்படைகளும் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில்,  அரசியல் அமைப்பின் ஒழுங்கினை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன. பெருநாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து