முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இடக்கையால் பேட்டிங்: 3 பவுண்டரிகள் அடித்த விஹாரி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      விளையாட்டு
2-Ram-58-2

Source: provided

கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் ஒருமுறை அல்ல, இருமுறை பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி.  இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார். 

முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள்.

________________

போலீஸ் ‘அவதார’ எடுத்த 

டோனி போட்டோ வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, போலீஸ் சீருடையில் மிடுக்கோடு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது. அந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘இவர்தான் அசல் சிங்கம்’, ‘இது சூப்பர் சிங்கம்’, ‘சூப்பர் போலீஸ்’ என்றெல்லாம் சொல்லி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.அது போல இந்த முறை டோனி, போலீஸ் வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் இப்போது வைரலாகி உள்ளது. டோனி, இந்திய பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் டோனி. அதற்காக அவர் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என அனைவரும் அறிவோம். ராஞ்சியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டியின் போது அவர் இந்திய வீரர்களை சந்தித்திருந்தார். போட்டியையும் நேரில் பார்த்து ரசித்திருந்தார். 

________________

மத்திய பட்ஜெட்டில் ரூ.3,397 கோடி

விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு

ஆசிய விளையாட்டு போட்டி, பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும். 2022-23-ம் நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.3,062.60 கோடி நிதி பின்னர் ரூ.2,673.35 கோடியாக குறைக்கப்பட்டது. சீனாவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ இம்முறையும் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக தொடர்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 606 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.439 கோடி அதிகமாகும். உலகளாவிய விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சிறந்த வீரர்களை உருவாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

________________

எஸ்ஏ20 லீக் தொடரில் 

பங்கேற்கிறார் பவுமா

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னைச் சீந்தாததால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது, அவர் என்ன நினைத்தோரோ அது நடந்துள்ளது. 

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 114.64. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டாம் அபெலுக்குப் பதிலாக பவுமாவைத் தேர்வு செய்துள்ளது. ஜனவரி 10 அன்று தொடங்கிய எஸ்ஏ20 போட்டி, பிப்ரவரி 11 அன்று நிறைவுபெறுகிறது. 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து