முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்  என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதல்வர் கூறியிருப்பதாவது, 

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும், தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால்தான், நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர். 

தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் நிலம், தீ, நீர்வழி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்றவர் திருவள்ளுவர். 

மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவப் புலமையோடு மிகினும், குறையினும் நோய் செய்யும் என்றார் வள்ளுவர். 

திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது.  நீர் நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊருணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என்று பிரித்துப் பெயர் சூட்டினர் தமிழர். எல்லாமே நீர் உள்ள இடம்தான். ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை அளவு கொண்டது.

 கடல் நீரை முந்நீர் என்றும், ஆற்று நீரை நன்னீர் என்றும், குடிநீரை இன்னீர் என்றும், குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும், நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம்  தமிழினம். உடம்பைக் குளிர்வித்தலே குளித்தலானது.  

தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காது என்பது தமிழ் பழமொழி.  நமது உடலின் அனைத்துச் செயல்பாடுகளும் முறையாகச் செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட மனிதனால் பல நாட்கள் இருக்க முடியும். நீரின்றி இருக்க முடியாது.

இத்தகைய உயிர்நாடி ஆன தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக்கூடாது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும். 

இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாகக் கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிரில்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர்வீர்.  தண்ணீரைக் காப்போம். தாய் நிலத்தை காப்போம். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து