முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 தற்கொலைகள்: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      இந்தியா
Parliament 2022 12-06

ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்த கேள்வி, மக்களவையில் எழுந்தது. இதற்கு, உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்தன என்றும், 21 உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவுகள் இல்லை என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வியில், ''அண்மையில் மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்சி, எஸ்டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐ.ஐ.டி. மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா? இப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்? பொருத்தமான நபர்களை இதுபோன்ற குழுக்களில் போட ஏற்பாடுகள் என்ன? இதுபோன்ற குழுக்களில் பட்டியல் சாதி பழங்குடி பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வழிகாட்டல்கள் ஏதேனும் உண்டா?” எனக் கேட்டிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான சு.வெங்கடேசனின் இந்தக் கேள்விகளுக்கான பதிலாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்திருந்ததாவது: ''108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87-இல் எஸ்சி, எஸ்டி செல்கள் உள்ளன. ஐ.ஐ.டி. 19 (23), ஐஐ.ஐ.டி. 14 (25), ஐஐஎஸ்.இ.ஆர் 7 (7), ஐஐஎம் 20 (20), என்ஐடி 26 (32), ஐஐஎஸ்சி 1 (1) என்ற அளவில் இந்த செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற நிறுவனங்களில் சமவாய்ப்பு செல், மாணவர் குறை தீர் செல், மாணவர் குறை தீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறை தீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் ஐ.ஐ.டி. 33, என்ஐடி 24, ஐஐஎம் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2009-இல் ராகிங்குக்கு எதிராக, 2019-இல் மாணவர் குறை தீர்ப்பு குறித்து, 2023-இல் தேசிய தற்கொலை தடுப்பு வழிமுறைகள் ஆகியவை மீது பல்கலைக்கழக மானியக் குழு தொடர்ந்து பல சுற்றறிக்கைகளை விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமநிலை, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உள வலிமையை மேம்படுத்த வழி சொல்லியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து