முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை உறுதி : சென்னை ஐகோர்ட் அமர்வு பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
Yuvraj 2023-06-02

சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ்சாட்சியம் அளித்ததால், நீதிபதிகள் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தீர்ப்பில், “கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. எனவே, யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் 5 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் சரியே" என்று தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறியது: "இந்த வழக்கில் வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த மனுவில், உடற்கூராய்வில் மூன்றாவது நபராக மருத்துவ நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில், ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான சம்பத்குமார் தாக்கல் செய்த உடற்கூராய்வு அறிக்கைதான் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு வேறு செல்போன்களையும், வாகனங்களையும் பயன்படுத்தினர். இந்த பத்து பேரும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தனர். அந்த சிசிடிவி பதிவுகள் தடயவியல் துறைக்கு அனுப்பி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தானாக கலந்துகொண்டு பேட்டி கொடுத்த யுவராஜ், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர் கோயிலுக்குச் சென்றதையும், அங்கு கோகுல்ராஜ் மற்றும் சுவாதியையும் சந்தித்ததையும், அவர்களின் செல்போனை பறித்துக்கொண்டதையும் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

எங்களது மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும்கூட, இந்த வழக்கில் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள்ள, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கக்கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஓர் அற்புதமான தீர்ப்பை அளித்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

கோல்ராஜின் தாய் சித்ரா கூறியது: "என் மகன் திருடவில்லை, கொலை செய்யவில்லை, எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை, ஒரு பாவமும் அறியாதவன். என் கணவர் இறந்த நிலையில், அவனுக்கு சின்ன வயதுதான். அமைதியாகத்தான் பேசுவான் என் மகன். அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று, இந்த விஷயத்தில் யாரெல்லாம் துணை இருந்தார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அந்த தண்டனையை அர்த்தநாரீசுவரன் கொடுப்பார். நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து