முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. தன் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-ஜி.ராமகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், - 21 - தேர்தல் புறக்கணிப்பு என்ற ம.தி.மு.க.வின் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், தி.மு.க. தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக்கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க.வின் பங்களிப்பு முக்கியமானது. நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய மகத்தானப் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. தலைமையில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய

கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது. இச்சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு,​ புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அ.தி.மு.க.வின் தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் தி.மு.க. - ​ காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ம.தி.மு.க. தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுவந்த ம.தி.மு.க. தற்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஊழல் மிகுந்த  மக்கள் விரோத  தி.மு.க.​​​காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, ம.தி.மு.க.வும் அதன் பொதுச் செயலாளர் வைகோவும் தாங்கள் எடுத்துள்ள முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதற்கான சுமுகத் தீர்வை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்