முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்றில் மூழ்கி மூவர் பலி முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 6 - திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர் இவர்களின் மரணத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், செலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணி மற்றும் திருமூர்த்தி என்பவரின் மகன் பிரபாகரன் ஆகிய இருவரும் 11.9.2007 அன்று கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், திருகாம்புளியூர், அருள்மிகு செல்லாண்டி அம்மன் திருக்கோயில் அருகே காவேரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், மாளேகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த காலஞ்சென்ற பார்த்திபன் என்பவரின் மகன் பி.கிருஷ்ணகுமார், ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 21.12.2011 அன்று பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  இவ்விபத்துகளில் அகால மரணமடைந்த பாலசுப்பிரமணி, பிரபாகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பெற்ற மகன்களை இழந்த இவர்களின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் வாடுவதாக என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இவர்களின் வறுமையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாலசுப்பிரமணி, பிரபாகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் கருணைத்தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்