முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தினருக்காக எதையும் செய்வார் கருணாநிதி - விஜயகாந்த் கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்  - 27 - தன் மீது எந்த வழக்கு விசாரணையும் வரக்கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்தது போல், தன்னுடைய குடும்பத்தினருக்காக எதையும் செய்வார் கருணாநிதி என்று சைதை துரைசாமியை ஆதரித்து பேசிய விஜயகாந்த் கூறினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக சைதை துரைசாமி நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கும் சைதை துரைசாமியை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தீவர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கொளத்தூர் இரட்டை ஏரி சந்திப்பில் துவங்கிய இந்த பிரச்சார பயணம் அண்ணாசிலை சந்திப்பு, 70 அடி ரோடு சந்திப்பு, பெரவள்ளூர் சந்திப்பு வழியாக திரு.வி.க. நகர் பேருந்துநிலையத்தை அடைந்தது. வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் சைதை துரைசாமி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் திறந்த வேனில் இருந்தபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளரை தளபதி, தளபதி என்கிறார்கள். அவர் எதற்கு தளபதி என்று தெரியவில்லை. அவர் துணை முதல்வர் ஆனது எப்படி? அவருடைய அப்பாவால் தான் துணை முதல்வர் ஆனார். மக்களா அவரை துணை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்?

ஆனால், அதே நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிடுகின்ற சைதை துரைசாமி மனிதநேயம் மிகுந்தவர். இவர், தன்னுடைய சொந்த முயற்சியால் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கி வருபவர். அரசு பணத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எல். அதிகாரியைக்கூட உருவாக்காதாவர் கருணாநிதி.  ஆனால், இவரோ தனிப்பட்ட முறையில் பல அதிகாரிகளை உருவாக்கி வருபவர். அதோடு கல்விக்காக பல அருந்தொண்டு ஆற்றி வருபவர். 

இவர், சைதாப்பேட்டையில் நின்று வெற்றி பெற்றதால் சைதை துரைசாமி ஆனார். இப்போது கொளத்தூரில் வேட்பாளராக நிற்கிறார். இவர் நிச்சயம் வெற்றி பெற்று கொளத்தூர் துரைசாமி என அழைக்கப்படுவார். 

ஒரு நல்ல வேட்பாளர் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

குடும்பத்திலுள்ள கஷ்டம் வீட்டில் உள்ள பெண்களுக்கு தான் தெரியும். ஆனால் கருணாநிதி வீட்டில் இதேபோல் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க கொள்ளையடிக்கிற பணத்தில் நான் பங்கு கேட்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்யுங்க, மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுங்க என்று தான் கேட்கிறோம். ஆனால் இதை கருணாநிதி கேட்கவில்லை. எனவே தான் கட்சி ஆரம்பித்து கருணாநிதியை கேள்வி கேட்கிறேன். அதை கேட்டால் என்னை கெட்டவன் என்று கருணாநிதி கூறுகிறார். இதையெல்லாம் மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி என்னை பார்த்து கேட்கிறார். மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என்று சொல்லிவிட்டு இன்று அ.தி.மு.க.-வோடு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று, இப்பவும் சொல்கிறேன், தெய்வம் தான் மக்கள் ரூபத்தில் வந்து என்னை கூட்டணி வைக்க வேண்டும் என்றது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நான் கூட்டணி வைத்தேன். யார் கூட கூட்டணி வைத்தேன் பெரிதும் மதிக்கின்ற எம்.ஜி.ஆர் கட்சியான அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி வைத்தேன். உங்ககூட கூட்டணி வைத்திருந்தால் கங்கை நீர் ஆகிவிடுவேனா? உங்க கூட்டமே கூவம் நீர் கூட்டம். 

நான் அ.தி.மு.க.வில் கூட்டணி சேர ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை, துணை முதல்வர் பதவியும் கேட்கவில்லை, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அதற்காக தான் கூட்டணி வைத்தேன். கருணாநிதி குடும்ப சேனல்களில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுக்கீடு பெற தி.மு.க. போராடுகிறது என்று செய்தி வருகிறது. ஆனால் என் மனைவிக்கு தே.மு.தி.க.வில் சீட் கொடுத்தால் விஜயகாந்த் மனைவி, மச்சினன் எல்லாருக்கும் சீட் கொடுக்கிறார் என்று இன்னும் ஒன்றை கருணாநிதி அடிக்கடி சொல்கிறார். (விஜயகாந்த்) பணம் வாங்கிவிட்டார். அதுவும் 500 கோடி, 1000 கோடி என்று கூறுகிறார். இப்படி பொய் சொல்லி, பொய் சொல்லி மக்களை கருணாநிதி ஏமாற்றி வருகிறார். 

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை பார்த்து  வென்டிலேட்டர் கூட்டணி என்று கருணாநிதி சொல்கிறார். எங்க கூட்டணி வென்டிலேட்டர் கூட்டணி இல்லை. எஸ்கலேட்டர் கூட்டணி நாங்க மேலே போய் கொண்டே இருப்போம். அதை நீங்க கீழே இருந்து பார்த்து கொண்டே இருங்க. 

போலீசுக்கு பரியாதை கொடுக்காத இந்த கருணாநிதி தேர்தல் கமிஷனை கண்டிக்கிறார். இவருக்கு  நேர்மையாக யாரும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் பிடிக்காது. அதனால்தான் தேர்தல் கமிஷனர் மீது குற்றச்சாட்டுகிறார். 

கருணாநிதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சீட் தர 60 சீட்,  63 சீட் என  நடத்திய பேரம், தனது குடும்பத்து மக்களை காப்பாற்றத்தான்.  தமிழக மக்களை காப்பாற்ற அல்ல.

தமிழ், தமிழ் என்று பேசும் இவர், ஒரு இனத்தையே அழித்தவர் தான். இலங்கைத்தமிழர்களை அழித்தவர். 

இலங்கை தமிழர்களுக்கு கடுகளவும் துரோகம் செய்யவில்லை என்கிறார். ஆனால், இவர் கடுகளவு அல்ல, கடலளவு துரோகம் செய்தவர். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர். இந்திராகாந்தியிடம், தனது குடும்பத்தின் மீது மேற்கொள்ளப்பட இருந்த விசாரணைக்காக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தவர். தன்னுடைய குடும்பத்து மக்களுக்காக எந்த துரோகத்தையும் செய்வார் கருணாநிதி. குடும்பத்தை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்.

அவருடைய ஆட்சியை கண்டு இப்போது மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். தி.மு.க. கூட்டணி ஓரங்கட்ட வேண்டிய கூட்டணி. உங்களுடைய கருப்பு மை தான்(வாக்கு) அவர்களை ஓட வைக்க வேண்டும்.

எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதுபோல் மக்கள் புரட்சி வெடிக்கும். ஏப்ரல் 13ம் தேதி இதற்கான முடிவை மக்கள் தெரிவிப்பார்கள். மக்கள் நன்றாக, நிம்மதியாக வாழ வேண்டுமானால், அ.தி.மு.க.கூட்டணிக்கு வாக்களியுங்கள்.  

ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் உள்ள இந்த கொளத்தூர் பகுதியின் மக்களுக்காக துரைசாமி எப்போதும் கடுமையாக உழைப்பார். உங்களோடு இருந்து பணியாற்றுவார். எனவே, அவருக்கு உங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மீண்டும் கேட்டு விடை பெறுகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா, சுலோச்சனா சம்பத், ஏ.ஏ.எஸ்.முருகன், வெற்றிநகர் மு.சுந்தர்,  பி.முனுசாமி, தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட துணை செயலாளர் வசந்தராமன், பகுதி செயலாளர் எஸ்.என்.பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். 

திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார கூட்டத்தை முடித்துக்கொண்டு மூலக்கடையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். இதற்கிடையில் வழி நெடுகிலும் வாக்கு சேகரித்துக்கொண்டே சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago