முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் பிரச்சாரம் செய்வாரா? இயக்குனர் சந்திரசேகரன் பதில்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 31 - அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தாம் மட்டுமே பிரச்சாரம் செய்யப் போவதாகவும், விஜய் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் இயக்குனர் சந்திரசேகரன் தெரிவித்தார். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனரும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு என்ற முடிவு அரசியல் நிலைப்பாட்டில் அல்லாமல் சமூக உணர்வுடன் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கம் அரசியல் கட்சியும் அல்ல. விஜய் அரசியலுக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகலாம். இப்போதும் மக்கள் இயக்கம் சமூக இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. சமூக உணர்வுள்ள தமிழனாக இந்த முடிவை விஜய் எடுத்திருக்கிறார். எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு முக்கியமான ஒன்று ஆட்சி மாற்றம். அதுதான் மக்கள் இயக்கத்தின் லட்சியம். 

இதற்கு முன்னோட்டமாகத்தான் சட்டப்படி குற்றம் படத்தை எடுத்திருக்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட அ.தி.மு.க கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருக்கிறோம். பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல. இந்த ஆதரவுக்கு பின் சில இடங்களில் விஜய் மன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. மற்ற அமைப்பில் இருந்து நீண்ட காலத்திற்கு முன் விலகி சென்றவர்கள் இப்போது அந்த செயலை செய்திருக்கிறார்கள். அதுவும் சிலரின் தூண்டுதலால்தான் நடந்திருக்கிறது. 

அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து ஒரிரு நாட்களில் பிரச்சாரத்திற்கு செல்கிறேன். தமிழகம் முழுவதும் 47 ஆயிரம் மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மன்றத்திலும் 50 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். சட்டப்படி குற்றம் படத்தை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பின் வெளியிட்டிருந்தால் இன்னும் பெரிய சிக்கல்களை சந்தித்து இருக்க வேண்டிய நிலை வந்திருக்கும் என்றார் சந்திரசேகரன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்