முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

81 வயதான சவுகார் ஜானகி மீண்டும் நடிக்க வருகிறார்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன். - 20 - பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.  நாடக துறையில் ஈடுபட்டு வந்த சவுகார் ஜானகி 1949 ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.  திருமணமான நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் சவுகார் ஜானகி. இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சவுகார். மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது,  15 வருடங்களுக்கு பிறகு நடிப்பது அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை. என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை. அது குறித்து நான் வருத்தப்படவும் இல்லை. இயக்குனர் ராஜ்மோகன் கூறிய கதையில் என் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதில் அலிபாபா கற்றது களவு கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். மீண்டும் நடிக்க வர காரணமாக இருந்த இயக்குனர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மவுனம் ரவி, தயாரிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நன்றி. இதற்கு முன் நான் கடைசியாக நடித்த படம் தொடரும். அஜித், தேவயானி நடித்த படம். தொடரும் என்ற டைட்டிலில் நடித்து விட்டு நடிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையானவர்கள். இப்போது ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பிரமிக்க வைக்கிறது. கமல்ஹாசனின் திறமை வியக்க வைக்கிறது.  ஹேராம் படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல். பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்த படத்தில் ஒரே ஒரே காட்சியில் மட்டுமே நடித்தேன். அதற்குள் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே செக்கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்த தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன். 

வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இப்போது எனக்கு வயது 81. ஆனாலும் மனதளவில் இன்னும் இளமையாக உணருவதால் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் சவுகார் ஜானகி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்