முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாசில்தார் மீது தாக்குதல் - ஜெயலலிதா கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

நெல்லை ஏப்-3  - மதுரை மேலூரில் தாசில்தார் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று நெல்லை டவுன் வாகையடி முனையில் நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பழனி, ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், நாங்குநேரி தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தேர்தல். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்று தரும் தேர்தல். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தநடவடிக்கையும் எடுத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ரூ.15 ஆக இருந்த அரிசி விலை ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. ரூ.13 ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. ரூ.28 ஆக இருந்த துவரம் பருப்பு விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35ஆக இருந்த புளி ரூ110 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35 ஆக இருந்த பூண்டு விலை 250 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் தற்போது ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் தற்போது ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மின் மிகுதியாக இருந்த தமிழகம் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. இதனால் ஜவுளி,நெசவு,விவசாயம் போன்ற தொழில்கள் நலிவடைந்து போனது. தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியல்ல ரவுடி கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறையாக மாறிவிட்டது. 

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணாநிதியின் தாரக மந்திரம். ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் துவக்கியுள்ளனர். மக்கள் பணத்தை சுருட்டி தம் மக்கள் வாழ வகை செய்தவர் கருணாநிதி. அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறிவந்த கருணாநிதி 5 முறை முதல்வராகியுள்ளார். இதன்மூலம் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். உலக பணக்காரர்களின் பட்டியலில் தம் குடும்ப உறுப்பினர்கள் முதலிடம் பெறவேண்டும் என்பதே கருணாநிதியின் ஆசை. திரைப்படத்துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். மதுரை மாவட்டம் மேலூரில் தேர்தல் பணியிலிருந்த தாசில்தார் அழகிரியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவர்கள்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்கள் ஆட்சியல்ல ஒரு குடும்ப ஆட்சி. இந்த தேர்தலை  வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியின் குடும்பத்தை அப்புறபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் பிரச்சனைகளை நான் நன்கறிவேன். 

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசியோடு அ.தி.மு.க. ஆட்சியமைந்தால் நெல்லை தொகுதிக்குட்பட்ட மானூர் புதிய தாலுகாவாக மாற்றப்படும். அங்கு பத்திரபதிவுத்துறை அலுவலகமும் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கான பணி நிரவல் முறை திருத்தி அமைக்கப்படும். பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆகிய தொகுதிகளின் பிரச்சனைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்புபோர்டு சொத்துக்கள் மீட்கப்படும். இஸ்லாமிய திருமணம் குறித்த கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலனை செய்யப்படும். மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். ரூ.1லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன பசுமை வீடுகள் அமைத்து தரப்படும். ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ரூ.1000 மாக உயர்த்தப்படும். கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். 58 வயது நிறைந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி மூலம் மின் வசதி செய்து தரப்படும். நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். சாலைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். நெசவாளர்கள், விவசாயிகள்,மீனவர்களின் பாதுகாப்புகள் உறுதிசெய்யப்படும். உழவர் பாதுகாப்புத்திட்டம் புதிய பொலிவுடன் செயல்படுத்தப்படும். ரவுடிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்