முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு அறிக்கை கிடைத்த பிறகே மின் உற்பத்தி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஆலந்தூர், ஜூலை.29 - பாதுகாப்பு அறிக்கை கிடைத்த பிறகு கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும்  என்று  என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மத்திய அமைச்சர்   நாராயண சாமி நேற்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:​

காவிரி நடுவர் மன்றத்தை கூட்ட வேண்டும் என முதல்​அமைச்சர் ஜெயலலிதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த கோரிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் ஆதரித்துள்ளார். இந்த நேரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எதுவும் எடுக்க முடியாது.

காவிரி நடுவர் மன்ற கூட்டத்தை கூட்டுவது பற்றி சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். ஒகேனக்கல் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அதை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடகா அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. தேவை இல்லாத பிரச்சினைகளை கிளப்புவது கர்நாடக அரசின் வாடிக்கையாகி விட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கியபோது கர்நாடக அரசு இதேபோன்ற பிரச்சினையை கிளப்பியது. ஒகேனக்கல் தமிழகத்துடன் ஒன்றிணைந்த பகுதியாகும். இதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி பாதுகாப்பு குழு கடந்த 1 1/2 மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு முடிந்தவுடன் பாதுகாப்பு குறித்த அறிக்கையை அக்குழு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அறிக்கை வழங்கிய 20 நாளில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

அன்னாஹசாரே குழு அரசியல் கட்சி தொடங்க இருப்பதை வரவேற்கிறேன். நம் நாட்டில் யார் வேண்டு மானாலும் அரசியல்கட்சி தொடங்கலாம். அதில் தடை எதுவும் இல்லை. அன்னாஹசாரே நல்லவர் தான். ஆனால் அவருடன் தன் மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்குவதற்காக போலி சாதி சான்றிதழ் தயாரித்தவர். ரூ.10 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் போன்ற ஊழல்வாதிகள் உள்ளனர். அன்னாஹசாரே குழுவில் ஒற்றுமை இல்லை. சென்னையில் டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்துவது அவரது விருப்பம். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் மாநாடு நடக்கிறது.

மத்திய அரசை பொறுத்த வரை அண்டை நாடான இலங்கையுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உரிய அதிகாரபகிர்வு, சம உரிமை கிடைத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் வன்முறை கலாச்சாரத்தை மத்திய அரசு ஆதரிக்காது.           

விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ள மந்திரிசபையில் ராகுல்காந்திக்கு எத்தகையை பதவி வழங்குவது குறித்து பிரதமரும், சோனியாவும் முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்