முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்பட பொது மக்கள் கூடும் இடங்கள், முக்கிய அலுவலகங்களும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

புனேயில் சில நாள்களுக்கு  முன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததை அடுத்து சுதந்திரத்தினத்தன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் 20-ம் தேதிவரை அமலில் இருக்கும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசாரின் ஒத்துழைப்புடன் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் விமான நிலையம் முழுவதும் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விமான நிலையத்தின் வாகன நிறுத்தும் பகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு வரும்  எல்லா வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அலுவலகத்துக்கு வரும் அனைவரும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வீடியோ படமும் எடுக்கப்படுகிறது.

இதுபோல் நகரிலுள்ள முக்கிய அலுவலகங்களும் போலீஸ் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்