முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பாரிமுனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி இருசக்கரவாகன நிறுத்துமிடம்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 18 - தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். தமிழ்நாடு நகர உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் சார்பில் மஹீந்திரா இன்ஜினியரிங் நிறுவனத்தில் கன்சல்டன்சி மூலம் சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இரு சக்கர வாகன அடுக்குமாடி நிறுத்துமிடம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் நேற்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பிறகு மேயர் சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 கிரவுண்ட் (2939.39 ச.அடி) பரப்பிலான இடத்தில் 800 முதல் ஆயிரம் வரையிலான இரண்டு சக்கர வாகன அடுக்குமாடி நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் சார்பில் மஹீந்திரா இன்ஜீனியரிங் நிறுவன கன்சல்டன்சி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 5 மாடி இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி நிறுத்தகத்தில் கழிப்பிட வசதிகள், தீ தடுப்பு இயந்திரங்கள் ஆகியவைகள் அமைக்கப்படும். இக்கட்டிடத்தில் சாய்வுப் பாதை மாடியில் வெற்றிடம் உள்ளது என்பதை அறிய கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படுகின்றன. சூரிய விளக்குகளும் நிர்மாணிக்கப்படும். இதற்காக வரும் 24-ந் தேதி நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அடுத்த வாரத்தில் டெண்டர் கோரப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். மேலும் தியாகராய நகர் பனகல் பூங்கா அருகே பாஷ்யம் ரோட்டில் கார் களை நிறுத்துவதற்காக அடுக்குமாடி கார் பார்க்கிங் (நவீன நிறுத்துமிடம்) கட்டப்பட உள்ளது. இந்த கார் பார்க்கிங் தனியார் மூலம் செயல்படுத்துவது தொடர்பாக ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்படும். சென்னையில் எங்கெல்லாம் வாகன நெரிசல் உள்ளது என்பதை கண்டறிந்து உலகளாவிய டெண்டர் கோரப்படும்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார். அப்போது மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன் உடனிருந்தார்.

 

படவிளக்கம்

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ரூ.4கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடத்தின் மாதிரி தோற்றம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்