முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. போலீசில் சரண் அடைந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,ஆக.- 19 - கிர”னைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று போலீசில் சரண் அடைந்தார்.  மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா  மதுரை மாவட்டத்தில் உள்ள கிர”னைட் குவாரிகளை 18 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அவரும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால் புறம்போக்குகள் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார் கிரானைட் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குழுவினர் கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு விதி மீறல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்கள் மற்றும் கிரானைட் அதிபர்கள் மீது 13 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தி  அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிஆர்பி நிறுவனத்தின் மூலம் இயங்கி வந்த 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த 2 பஸ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான  லாரிகள் மற்றும் பல வாகனங்களின் உரிமங்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.  இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிஆர்பி நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் மற்றும் சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் நாகராஜ், மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு, வருகிற 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பிஆர்பி கிர”னைட் நிறுவனத்தின் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று மதியம் 12.50 மணியளவில் வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், பீட்டர் ரமேஷ், சங்கரநாராயணன் ஆகியோருடன் ஒரு காரில் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தார். பின்னர் காரைவிட்டு இறங்கி தனது வழக்கறிஞர்கள் புடை சூழ சூப்பிரெண்டு அலுவலகத்திற்குள பி.பழனிச்சாமி சென்றார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி மயில்வாகனனிடம் மனுவை கொடுத்து போலீசில் சரண் அடைந்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் வெளியே சென்றிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பி.பழனிச்சாமி போலீஸ் எஸ்பியிடம் மனு ஒன்று கொடுத்தார். தான் போலீசில் சரண் அடைவதாக தெரிவித்தார். பின்னர் போலீசில் சரண் அடைந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியிடம் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பகல் 1.30 மணியளவில் பி.பழனிச்சாமியை போலீசார் வேனில் ஏற்றி சென்று வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இது பற்றி போலீஸ் எஸ்பி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கிரானைட் முறைகேடுகள் சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டுவந்த பி.பழனிச்சாமி இன்று (நேற்று) சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சரண் அடைந்தவரிடம் 24  மணி நேரம் விசாரணை நடத்த போலீசாருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடங்கிய ஒரு குழுவை அமைத்து இந்த விசாரணை நடத்தப்படும். சுப்ரீம் கோர்ட் வழங்கிய விதிமுறையின் படி வழக்கறிஞர்கள் பி.பழனிச்சாமியை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். பி.பழனிச்சாமியை எங்கே வைத்து விச”ரணை நடத்த உள்ளோம் என்பது பற்றி தெரிவிக்க இயலாது என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்