முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஈரான் புறப்பட்டு செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

 

புதுடெல்லி. ஆக. 26 - பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஈரான் புறப்பட்டு செல்கிறார்.  ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணி சேரா நாடுகள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். வளை குடா நாடுகளில் ஒன்றான ஈரானிடம் இருந்துதான் இந்தியா அதிகமான கச்சா எண்ணையை வாங்குகிறது. 

ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ஈரானை ஒதுக்கி வைத்துள்ளன.  ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதால் அந்நாட்டுக்கு எதிராக பல பொருளாதார தடைகளையும் மேலை நாடுகள் விதித்துள்ளன.

இந்த நிலையில்  ஈரான் தலைநகர் டெஹ்ரானில்  அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக  பிரதமர் மன்மோகன் சிங் நாளை  ஈரான் புறப்படு செல்கிறார்.

கடந்த 2001 ம் ஆண்டு  அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்  ஈரான் நாட்டிற்கு  பயணம் செய்தார். அதன் பிறகு  இப்போது ஈரான் நாட்டிற்கு பயணம் செய்யும் முதல் பிரதமர் மன்மோகன் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ள கூடாது என்று இந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள்  வலியுறுத்தி வரும் வேளையில் இந்திய பிரதமர் ஈரான் செல்வது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக  அமைந்துள்ளது. 

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை  செயலாளர்  ரஞ்சன் மத்தாய் கூறுகையில்  ஈரானில்  இந்தியர்கள் அதிகமாக இருப்பதால் மட்டுமல்  ஈரானிலிருந்துதான் இந்தியா  அதிகமான கச்சா எண்ணையை வாங்குகிறது , அது மட்டுமல்ல ஆப்கானிஸ்தான் புனரமைப்பு பணிகளிலும் ஈரான்  இந்தியாவுடன் ஒத்துழைக்கிறது. எனவேதான் மன்மோகன் சிங் அந்நாட்டிற்கு செல்கிறார் என்றார்.

ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே  வர்த்தக உறவுகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

ஈரான் செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் நாட்டு ஜனாதிபதி  மெஹ்மூத் அகமதிநிஜாத்,  ஈரான்  தலைவர்  அயதுல்லா  அலி கோமேனி ஆகியோரையும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்துவார்.

அப்போது அவர்களுடன் இரு நாட்டு உறவுகள் மற்றும்  சர்வதேச பிரச்சினைகள் குறித்து  மன்மோகன் சிங் விவாதிப்பார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த ஈரான் பயணம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்