முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகிரங்கமாக பணப்பட்டுவாடா: தி.மு.க. வினர் கைது

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 6 - வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக அடுத்தடுத்து தி.மு.க.வினர் மீது புகார்கள் வருவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.  மேற்கு தொகுதியில் பட்டுவாடா செய்ய இருந்த பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதியில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகார்களின் மீது பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

தெப்பக்குளம் காமராஜர்புரம் பகுதியில் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று விசாரித்துக் கொண்டிருந்த தி.மு.கவை சேர்ந்த மெய்யப்பன் மற்றும் டீச்சர்ஸ் காலனியில் வாக்காளர் பட்டியலை சரி செய்து கொண்டிருந்த தி.முக.வை சேர்ந்த காட்டுராஜன் ஆகியோரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். 

சுப்பிரமணியபுரம் ஓதுவார்புரம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்களை தேர்தல் கண்காணிப்பு அலுவலர் மணிவண்ணன் கண்டறிந்தார். அவரது புகாரின்பேரில் ஆண்டாள்புரம் தி.மு.க.வை சேர்ந்த தம்பித்துரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ 8 ஆயிரத்து 40 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தி.மு.க.வை சேர்ந்த பாலு, மற்றும் காங்கிரசை சேர்ந்த சண்முகம் ஆகியோர் பணம் விநியோகிப்பதாக தகவல் வந்தது. இதன் பேரில் திலகர்திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தை கைது செய்தனர். பாலு தப்பி ஓடி விட்டார். சண்முகத்திடம் இருந்து ரூ 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தல்லாகுளம் பகுதியில்  இரு சக்கர வாகனத்தில் அனுமதியின்றி கொடி கட்டி சென்றதாக அம்பேத்கார் ஜனதா கட்சி தலைவர் பெரியசாமியை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இது போல பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்