முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் போராடுவது நியாயமாகாது: போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.- 11 - உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போராடுவது பொருத்தமாக அமையாது என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அணுஉலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட இரு அணுமின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த சூழ்நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பிய சில ஐயப்பாடுகளையடுத்து, அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை தொடர வேண்டாம் என்றும், இது தொடர்பான கோரிக்கை மனுவினை நேரில் அளிக்க நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறும் 19.9.2011 அன்று பாரதப் பிரதமரை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்திருந்தவர்கள் 21.9.2011 அன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் மேற்கொண்டு தொடரப்படக் கூடாது என்னும் தீர்மானத்தை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தனர். இவர்களின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு, 22.9.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து,  தமிழக நிதி அமைச்சர் தலைமையிலான குழு 7.10.2011 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, உள்ளூர் நிலவரங்களை எடுத்துரைக்கும் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தது.  இந்த மனுவினைப் பெற்றுக் கொண்ட  பாரதப் பிரதமர் மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.   இதன்படி, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.  இந்தக் குழு அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசுப் பிரதிநிதிகளுடனும் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியது.  இதனையடுத்து, 31.1.2012 அன்று இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினரால் எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்றும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்து இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுநர் குழு அளித்தது. இதனைத் தொடர்ந்து, அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வுகள் குறித்தும் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வண்ணம், மாநில அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும், அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்று தனது அறிக்கையில் தெளிவுபடக் கூறியுள்ளதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலும், 19.3.2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து, அணுமின் நிலையப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.       

இதன் பின்னர், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  இந்த வழக்கில் அணுமின் நிலையப் பணிகளை தொடர அனுமதி அளித்து  சென்னை உயர் nullநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை உயர் nullநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது பொருத்தமானதாக அமையாது. இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட உள்ளதைக் கருத்தில் கொண்டு, இடிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.  இதனையறிந்த காவல் துறை, அணுமின் நிலையத்திற்கு செல்லும் வழிகளான தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக் கிணறு ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.  ஆனால், போராட்டக்காரர்கள் இந்த இரு வழிகளையும் தவிர்த்து கடற்கரை வழியாக, அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் முற்றுகைப் போராட்டத்தில் 9.9.2012 அன்று ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேற விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். இந்த நிலை நேற்று (முன்தினம்) இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று (நேற்று) காலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கூடினர். அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி மேலும் முன்னேற முயற்சித்ததோடு, இன்று (நேற்று) காலை 11.30 மணியளவில் காவல் துறையினரை கட்டைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் சில காவல் துறையினர் காயமடைந்தனர். எனவே, தங்களை காக்கும் பொருட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும் நோக்குடனும், அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினைக் கருத்தில் கொண்டும், வேறு வழியின்றி காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.   கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், அணு உலைக்கு எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய அணு உலை எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அணுமின் நிலையம் விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பினை நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்று(நேற்று)  தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்