முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அளவிற்கு மக்களை ஏங்க வைத்தவர் கருணாநிதி ஊட்டியில் ஜெயலலிதா பேச்சு

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

ஊட்டி, ஏப்.- 7 - இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அளவிற்கு மக்களை ஏங்க வைத்தவர் கருணாநிதி என்று ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். தமிழகத்தில் வரும் 13-ந் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் கடந்த 13 நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் 14-வது நாளான நேற்று மதியம் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட ஜெயலலிதா ஊட்டியிலுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வந்திறங்கினார். அவருக்கு கழக அமைப்பு செயலாளர் தம்பிதுரை, அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், நகர செயலாளர் டி.கே.தேவராஜ், வேட்பாளர்கள் புத்தி சந்திரன், எஸ்.செல்வராஜ், பெள்ளி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தீட்டுக்கல்லில் இருந்து வேனில் புறப்பட்டு படகு இல்லம் வழியாக மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவிற்கு வந்தார். ஜெயலலிதா வருவதை அறிந்த வர்ண பகவான் நேற்று காலையில் ஊட்டி நகரில் மழையை பொழிய வைத்து நகரை சுத்தப்படுத்தினார். ஊட்டிக்கு வந்த ஜெயலலிதாவிற்கு வழிநெடுகிலும் செண்டை மேளம் முழங்க, காவடியாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரச்சார மேடை  அமைக்கப்பட்டிருந்த மின்வாரிய ரவுண்டானா பகுதிக்கு வந்த ஜெயலலிதா அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 16 நிமிட நேரம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:​

என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, என் ரத்தத்தின் ரத்தமான உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே, வாக்காளப் பெருமக்களே அனைவருக்கும் அன்புகலந்த வணக்கம். நடைபெற இருக்கின்ற தேர்தல் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுகிற, தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தருகிற தேர்தல். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார உற்பத்திதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் உள்ளது. இவற்றையெல்லாம் சீர்குலைத்தவர் கருணாநிதி. இவரால் தான் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயம் குறைந்து விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைய வைத்தது கருணாநிதியும் அவருடைய மகனும் தான். தா.கிருஷ்ணன் கொலை வழக்கு, மதுரை பத்திரிகை அலுவலகம் தீவைத்து எரிப்பு, அரசு அதிகாரி பழிவாங்குதல் போன்றவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள்கடத்தல் வழக்கில் ஈடுபட்ட என்.கே.கே.பி.ராஜா மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? அமைச்சர் பருதி இளம்வழுதி தேசிய கட்சி அலுவலகத்தை தாக்கிய போது கருணைநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கொலைகுற்றவாளியை சிறையில் சென்று

சந்தித்து ஆறுதல் கூறினாரே நடவடிக்கை எடுத்தாரா கருணாநிதி? ஹார்லிக்ஸ் திருட்டு வழக்கு குறித்து ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இப்படி எதற்கும் திரானியற்ற முதலமைச்சர் சட்டம் ஒழுங்கைப்பற்றி பேசுகிறார். இதைப்பற்றி பேச கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. 

இந்த மைனாரிட்டி தி.மு.க.,ஆட்சியில் எங்குபார்த்தாலும் கொலை, தற்கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மின்சாரத்தை பொறுத்தவரை மின்வெட்டுதான் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. மின்வெட்டுக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.மின்மிகை மாநிலமாக இருந்த மாநிலத்தை மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான் கருணாநிதி 5 ஆண்டுகால சாதனை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாலும், மின்வெட்டு அதிகரித்து கொண்டிருப்பதாலும் தமிழகத்தில் அனைத்து தொழில்களும் நலிவடைந்துவிட்டன. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அளவிற்கு மக்கள் ஏங்கும் நிலைக்கு தமிழ்நாட்டை சீரழித்து விட்டார் கருணாநிதி. கருணாநிதியைப் பொறுத்தவரை தன்குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். தன் குடும்ப உறுப்பினர்களைத்தவிர யாரும் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் அவரது எண்ணம். திரைப்படத்தொழில் கருணாநிதியின் குடும்பத்தொழில் ஆகிவிட்டன. பத்திரிகைத்துறையையும் கருணாநிதி குடும்பத்தினர் கபளிகரம் செய்துவிட்டனர். இயற்கை வளங்களான மணல், கிரானைட் போன்றவற்றை கருணாநிதி குடும்பத்தினர்தான் கொள்ளையடிக்கின்றனர். கொடுங்கோல் ஆட்சி செய்பவர் கருணாநிதி குடும்பத்தினர் தான். கேபிள்டிவி தொழிலும் கருணாநிதி குடும்ப வசம் விட்டது. மீதி இருக்கின்ற தொழில்களை அபகரிக்கத்தான் 6-வது முறையாக தன்னை முதலமைச்சராக வருவதற்கு கருணாநிதி உங்களை நாடி வந்துகொண்டிருக்கிறார். வாக்காளப் பெருமக்களே ஏமாந்து விடாதீர்கள். 

தமிழின பாதுகாவலர் என்று சொல்லியே தமிழினத்தை அழிக்க உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி. இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் என்ற கோஷத்தை கருணாநிதி பயன்படுத்தியிருந்தால் அங்கு போர் நின்றிருக்கும். ஆனால் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, 3 மணி நேரத்தில் போர் நின்றுவிட்டது என்று தெரிவித்து உண்ணாவிரத நாடகத்தை முடித்துவிட்டார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒரே நாளில் இலங்கையில் கொல்லப்பட்டனர். கல்நெஞ்சம் கொண்ட கருணாநிதி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க.வின் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்திருந்தால், நிச்சயமாக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றிருப்போம். தமிழினத்தை பாதுகாத்திருப்போம். ஆனால் கருணாநிதியோ தன் இனத்தை அழித்து தன் இனத்தை பாதுகாத்துக் கொண்டார். இப்படிப்பட்ட கருணாநிதியை எதற்கு 6-வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்காளப் பெருமக்களே சிந்தித்து செயல்படுங்கள். செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழிக்கு முன்னுரிமை என்று சொல்லி, கனிமொழிக்கு முன்னுரிமை கொடுத்தவர் கருணாநிதி. இப்படிப்பட்டவருக்கு எதற்காக முதலமைச்சர் பதவி. வாக்காளப் பெருமக்களே சிந்தித்து வாக்களியுங்கள். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் ஒட்டுமொத்த சொத்தை கருணாநிதி, தயாளு, ராசாத்தி, கனிமொழி ஆகியோர் கொள்ளையடித்து கருணாநிதி குடும்பத்திற்கு சென்றுவிட்டது. மாட்டிக்கொண்டது தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த ராசா, பலியானது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா. இவ்வளவு நடந்தும் கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெட்கமில்லாமல் உங்களிடம் வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எதற்கு இந்த நாட்டை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு ! ஊழல் நடந்து மூன்று ஆண்டுகளாகி விட்டது. அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொல்லும். ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற நோக்கில் மத்திய அரசு வழக்கை தாமதப்படுத்துகிறது. தமிழக மக்களாகிய நீங்கள் தான் தெய்வங்கள்.  கருணாநிதி குடும்பத்தை தண்டிக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. நல்ல தீர்ப்பை தாருங்கள். தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளப்பெருமக்களே சிந்தியுங்கள். கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால் தழிழக மக்களாகிய உங்களை எல்லாம் விட்டுவிட்டு தமிழ் நாட்டையே தன் குடும்ப  வசம் ஆக்கிக்கொள்வார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? அதற்கு ஒரே வழிதான் உள்ளது. வரும் தேர்தல் நாளன்று நீங்கள் சிந்தித்து வாக்களித்து கருணாநிதியை குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கு கருணாநிதி போட்டியிட்ட இடங்களிலெல்லாம் டெபாசிட் இழந்தது என்று வரலாற்று சாதனையை வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் செய்து முடிக்க வேண்டும் செய்வீர்களா?.  

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்களின் பேராதரவுடனும் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் நல்லாட்சி அமைய அ.தி.மு.க.கூட்டணி கட்சி வேட்பாளர்களான ஊட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் புத்தி சந்திரனுக்கு புரட்சித்தலைவர் கண்ட வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுகிறேன். அதேபோல் குன்னூர் தொகுதியில் போட்டியிடு இ.கம்யூ.,வேட்பாளர் ஏ,பெள்ளிக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், கூடலூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.,வேட்பாளர் எஸ்.செல்வராஜ்க்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர்கள் டி.கே.தேவராஜ்(ஊட்டி), சத்தார்(குன்னூர்), ராஜாதங்கவேலு(கூடலூர்), முன்னாள் நகர செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், டி.சுப்பிரமணி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் அனந்தகிருஷ்ணன்(வழக்கறிஞர் பிரிவு), எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார்(ஜெ.பேரவை), ராஜகோபால்(தொழிற்சங்கம்), ராஜாமுகமது(இளைஞரணி) நந்தகுமார்(மாணவரணி), வினோத்(பாசறை) குன்னூர் தொகுதி செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர்கள் கடநாடு குமார்(ஊட்டி), கலைச்செல்வன்(குன்னூர்), உலிக்கல் சிவாஜி(மேலூர்), பச்சநஞ்சன்(கோத்தகிரி), ஸ்டீபன்(கீழ்கோத்தகிரி), ஏடிபி மாநில செயலாளர் ஜெயராமன், எல்.மணி, பலராமன், மாயன், இம்தியாஸ், மகளிரணியைச் சேர்ந்த நாகரத்தினம், சத்தியபாமா, பார்வதி, மல்லிகா, சிக்கந்தர் பாஷா, சிவசக்தி குமார், வினித்குமார், அக்கீம் பாபு, எச். நாராயணன், ஊட்டி கே.பாபு, கே.சந்திரன், கரன்சி சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பல்லாயிரணக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்