முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான தி.மு.க. விற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்- முத்துமணி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 8 - தி.மு.க. விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் எம்.பி. முத்துமணி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. சார்பாக பொதிகை டி.வி. யில் முத்துமணி பேசியதாவது, வரும் 13ம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தொலைக்காட்சியில் பேச எமக்கு வாய்ப்பு அளித்த தொலைக்காட்சி நிலையத்தாருக்கும், எமது கருத்துக்களை காது கொடுத்துக் கேட்க  இருக்கின்ற தொலைக்காட்சி அன்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்குகின்றேன்.

இந்த தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையில் உள்ள அனைத்திந்திய அண்ணா தி.மு.க.ழகக் கூட்டணிக்கும், தி.மு.க கூட்டணிக்கும் இடையே பிரதானப்போட்டியாகும்.

இன்றைய தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போதைய தி.மு.க. ஆட்சியில் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து பெருகிவிட்டன. அன்றாடம் அரிசி கடத்தலும், மணல் கடத்தலும் நடைபெறுகின்றன. மாணவர் கடத்தலுக்கும் பஞ்சமில்லை. தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், ஆலயச்சொத்துக்கள், ஆளில்லா வீடுகள் ஆகியவை அபகரிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று கருதப்படுகிறது. 

இன்றைய தி.மு.க. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காய்கறிகள் பன்மடங்கு உயர்ந்து மக்கள் தாங்க முடியாத துன்பக்கடலில் மிதக்கிறார்கள். பதுக்கலையும், கடத்தலையும் தடுக்க இந்த அரசு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை. முந்தைய தேர்தலில் தி.மு.க. தான் சொன்ன வாக்குறுதிப்படி, ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவில்லை. சிறு வணிகத்தில் அந்நிய பெருவர்த்தக முதலீட்டைத் தடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் சீர்குலைந்துவிட்டன.

2001 முதல் 2006 வரை அம்மா தலைமையில் இருந்த அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசு சுமத்தி சென்ற 38 ஆயிரம் கோடி ரூபாய் கடனை சரிசெய்து 3ஆண்டுகால வறட்சி, சுனாமிப் பேரழிவு மற்றும் பெருவெள்ளச் சேதம் ஏற்பட்டதை எல்லாம் சந்தித்து விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தினார் என்பதை வாக்காளப் பெருமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரை மின்வெட்டுக்கொடுமை தொடர்கிறது. மின்நிலையங்களை பராமரிக்காததும், புதிய மின் உற்பத்தி செய்யாததும், மின்திருட்டை தடுக்காததும், நாடு முழுவதும் நடத்திய ஆடம்பர விழாக்களும் இந்த கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் இந்த தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுவிட்டன. சென்னைச் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும், உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மற்றும் நீதிபதி தாக்கப்பட்டதும், சென்னை மாணவர் கடத்தலில் ஏற்பட்ட நிகழ்வுகளும் இதற்கு சாட்சியங்கள். இந்த அரசு சட்டத்தின் ஆட்சியா நடத்துகிறது?

நிதிநீர்ப் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக காவிரி நீர்ப்பிரச்சனை மற்றும் பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு தவறிவிட்டது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு அதனால் இதுநாள் வரை சுமார் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்ததற்கு மூலகாரணம் நமக்கு சொந்தமான கச்சத்தீவை,1974 ல் இலங்கைக்கு தாரைவார்த்ததேயாகும். இதற்கு அன்றைய தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது. மீனவர்களின் துன்பத்தை நிரந்தரமாக துடைக்கும் நோக்கத்தில் நமக்கு சொந்தமான கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளவர் அம்மா அவர்களே ஆவார். ஈழத்தமிழர்கள் அந்நாட்டு மக்களுடன் சம உரிமை பெற்று வாழ வகை செய்யவேண்டும் என்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க அனைத்திந்திய அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் மத்திய அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆவார். அவர் கொள்கைபரப்பு செயலாளராக இருக்கிறார். இந்த கட்சியின் பொதுக்குழுவில் அவருக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த பெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களே அமைத்துக் கொள்வதாகும். துப்பாக்கி தோட்டாவை விட ஓட்டுச்சீட்டே வலிமையானது, இவ்வாறு எடுத்துச்சொன்னவர் அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆவார். தந்தை பெரியாரின் தளபதியான பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்கள். 

விஷம்போல் ஏறிவிட்ட விலைவாசியைக் கட்டுப்படுத்த, மின்வெட்டை அகற்றிட, தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப்பூங்காவாக மாற்றிட அனைத்து தரப்பு மக்களுக்கும் சமதர்ம நீதி வழங்கிட, தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை வென்றெடுத்திட, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி மக்கள் ஆட்சி மலர்ந்திட அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் கண்ட வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னத்திலும் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்து அம்மா அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்குங்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றியாகும். இவ்வாறு முத்துமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago