முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா தங்கபாலு மீது போட்டி வேட்பாளர் புகார்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 11 - சென்னை மயிலாப்பூர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மீது தேர்தல் பார்வையாளரிடம் காங்கிரஸ் போட்டி வேட்பாளர் சிவகாமி புகார் செய்துள்ளார். மயிலாப்பூர் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்டத்தை அடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு வேட்பாளர் பணம் கொடுப்பதாக தொடர்ந்து வரும் புகார்களின் பேரில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மயிலாப்பூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. அவரை மாற்ற வேண்டும் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். 

ஆனால் கே.வி.தங்கபாலு வேட்பாளர் அறிவிப்பில் மாற்றம் இல்லை என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக இருந்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சிவகாமி கே.வி.தங்கபாலுவை எதிர்த்து சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து பெரிய கட்சிகளுக்கு இணையாக வீடுவீடாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்து வருவதை அறிந்தனர். ஏற்கனவே கே.வி.தங்கபாலு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது குறித்து தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்த சிவகாமி நேற்று நேரடியாக பணம் விநியோகம் செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தன்னுடன் பிரச்சாரத்தில் இருந்த அம்மு, விஜி, சதீஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாப்பூர் லஸ் சந்திப்பிற்கு வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கபாலுவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினார்கள். தகவல் கிடைக்கப்பெற்று மயிலாப்பூர் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களின் சமரசத்தை சிவகாமி ஏற்றுக்கொள்ளவில்லை. கே.வி.தங்கபாலு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு அவர் கைது செய்யப்படும் வரை கலைந்து செல்லமாட்டோம் என கூறி சாலை மயிலை கைவிட மறுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படத்தி மயிலாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிவகாமி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து சிவகாமி நேற்று காலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உள்ள தேர்தல் பார்வையாளர் அபர்ணாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் தங்கபாலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட அபர்ணா வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தது விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்