முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வாக்காளர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.12 - ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்திய கருணாநிதி ஆட்சியை அகற்ற அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அமைதி புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 13-ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த தேர்தல்களில் வெற்றிபெற அயராது உழைத்தோம். நானும் இரவும், பகலும் பாராமல் நாட்டு மக்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். எனது நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்களும், கூட்டணியினரும் ஆங்காங்கே சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூட தங்கள் எழுச்சியைக் காட்டினர். மக்கள் மனப்பூர்வமாக நம்மை ஏற்றுக் கொண்டிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு வரவாற்றிலேயே என்றும் இல்லாத அளவிற்கு ஒரு குடும்பத்தின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டுள்ளது. மக்களாட்சியை பயன்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, மக்களை வாழ வைக்கவில்லை. தன் குடும்பம் உயரவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றியதன் விளைவாக தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையே கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டற்குள் வந்து விட்டது. 

செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், சினிமாத்துறை, நிலம் வாங்கி வீடு கட்டுதல் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் கருணாநிதி குடும்பம் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மக்களின் உரிமைகள் கருணாநிதி குடும்பத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்பதே இந்தத் தேர்தலில் நமது தலையாய  கடமையாகும்.

மக்களை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், ஆள் கடத்தில், கொலை, கற்பழிப்பு போன்ற பெருகி வரும குற்றங்கள் கருணாநிதி ஆட்சியின் இலக்கணமாகி விட்டது. மத்திய அரசில் பங்கு பெற்று கருணாநிதி குடும்பத்தினர் ஈடுபட்ட ஒன்றே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஊழல், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்துவிட்டது.

தமிழ்நாட்டின் பல துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி, தமிழ்நாட்டுக்கே அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ள கருணாநிதி ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலம் அகற்றுவதே நாம் பிறந்த தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய தலைசிறந்த பணியாகும். இதற்கான வாய்ப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிடவே இதுரரையில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க. உட்பட இதர எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது.

நாடு முதலில், கட்சி பிறகு என்றார் அறிஞர் அண்ணா. ஆகவே நாட்டு நலன் கருதி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிற ஒன்றாகும். சகல துறைகளிலும் வீழ்ந்து விட்ட தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துகின்ற பெரு முயற்சியாகும்.

மக்களின் உரிமைகளை மீட்கவும், தமிழ்நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் அ.தி.மு.க..வோடு நாம் கூட்டணி வைக்க முயற்சித்தபோது, எப்படியும் இந்தக் கூட்டணி வரவிடக்கூடாது என்று கருணாநிதியும், அவரது சகாக்களும், காவல்துறை ஒற்றர் பிரிவும் சதிவலை தீட்டினர். ஆனால் அதை முறியடித்து வெற்றிகரமான கூட்டணியை உருக்கினோம். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் இதை வெற்றிக் கூட்டணி என்று அழைப்பதில் வியப்பில்லை.

எனினும் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றங்கள் அரசாட்சியில் உள்ளனர். பணபலம், பலாத்திரம், அதிகார துஷ்பிரயோகம் என்று அனைத்தையும் பயன்படுத்தினர். குறிப்பாக தி.மு.க.வினர் பண மழை பொழிய துவங்கி விட்டனர். ஓரளவிற்காவது நியாயமாக தேர்தல்கள் நடத்த வேண்டுமென்று பாடுபடுகின்ற தேர்தல் கமிஷனையே முதலமைச்சர் கருணாநிதி மறைமுகமாக மிரட்டுகிறார் என்றால், சாதாரணமான பாமர மக்கள், இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்? இருப்பினும் ஆர்வம் மிக்க இளைஞர்களும், குடும்பத்தை நடத்த தவிக்கின்ற தாய்மார்களும் அரசியல் சீரழிவைக் கண்டு வேதனைப்படுகின்ற பெரியோர்களும், இன்றைய ஆட்சியில் மாற்றம் தேவை என்பதை உணருகின்றனர்.

இதன் விளைவாகவே தமிழ்நாட்டில் இன்று கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி திரண்டுள்ளது. இந்த மக்கள் சக்தியை வாக்குகளாக மாற்றி மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவது கட்சித் தோழர்களின் கையில் உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை பணத்தைக் கொண்டு வாக்குகளை திருட முயற்சிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து பாமர மக்களை காப்பாற்றவும், வாக்காளர்களை இடைவிடாது அணுகவும், வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வைப்பதும் கழகத் தோழர்களின் கடமையாகும்.

எனது உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களாகிய உங்களை இந்தத் தேர்தல் மூலம் ஒரு புதிய வரலாறு படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன்.

அ.தி.மு.க., தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் நமது அணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகள் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியாளர்களாக ஆக்கித் தருவது மக்கள் கையில் உள்ளது. மக்களோ மாற்றத்தைக் காண விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்கு வடிவம் தர வேண்டியது நமது தோழர்கள் கையில் உள்ளது. ஆகவே மக்களை இடைவிடாது அணுகி வாக்குப்பதிவு செய்யும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் வாக்குச் சீட்டுகள் மூலம் ஒரு அமைதிப் புரட்சியை உருவாக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago