முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் கொச்சி விமானம் கடத்தப்பட்டதா?

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,அக்.20 - கொச்சி விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்புஏற்பட்டு போனது.    நேற்று காலை அபுதாபியில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் கொச்சியில் வானிலை மிக மோசமாக இருந்ததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரமாகியும் விமானம் அங்கேயே நின்று இருந்தது. பயணிகளையும் இறக்கிவிடவில்லை. மேலும் விமானம் எப்போது புறப்படும் என்ற தகவலும் அவர்களுக்கு சொல்லப்படவில்லை. அது மட்டுமல்ல. அவர்களுக்கு உணவோ, காபியோ, தண்ணீரோ கூட தரப்பவில்லையாம். 

   இந்த நிலையில் 3 மணி நேரம் கழித்து தங்களது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறிய விமானிகள் அனைவரையும் இறங்கி செல்லுமாறு கூறிவிட்டு அவர்களும் இறங்க முயன்றனர். இதனால் கொதித்துப்போன பயணிகள் விமானிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்காமல் அவர்கள் புறப்பட முயன்றனர். இதையடுத்து பயணிகள் விமானிகளை தடுத்தனர். விமானிகள் தங்களது அறை வாசலில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சில பயணிகள் விமானிகளை நெருங்கி அவர்களது அறைக்குள்ளேயே நுழைய முயன்றார்கள். இதையடுத்து விமான  கடத்த முயலுகிறார்கள் என்பதை தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தரும் பட்டனை விமானிகள் அழுத்தினார்கள். இதனால் விமான கடத்தலுக்கு முயற்சி நடப்பதாக நினைத்து கட்டுப்பாட்டு அறையினர் உடனடியாக விமான நிலை பாதுகாப்புபடையினருக்கு தகவல் தர அவர்களும் துப்பாக்கிகளுடன் அங்கு வந்து சேர்ந்தனர். இதன் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையமே அல்லோலகல்லோல பட்டது. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். விமானிகளையும் பத்திரமாக அழைத்து சென்றனர். பயணிகளையும் கீழே இறங்க அனுமதித்தனர்.

   இந்த விவகாரத்தில் டெல்லியில் இருந்து அனுமதி தரப்படும் வேண்டும் என்பதால் விமானம் மூன்றரை மணி நேரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தது. மேலும் அபுதாயிலிருந்தே இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியதாம். இப்படி தாமதமானதால்தான் பயணிகள் கொதித்து போனார்கள். பிறகு வேறு இரண்டு  விமானிகள் வரவழைக்கப்பட்டு அந்த விமானம் திட்டமிட்டபடி கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமான கடத்தல் நாடகம் விமானம் புறப்பட்ட பிறகுதான் ஒரு முடிவுக்கே வந்தது. விமானத்தை நாங்கள் கடத்தி விட்டதாக விமானிகள் கூறியது தவறு. உண்மையில் எங்களைத்தான் ஏர்இந்தியா கடத்தி விட்டது என்று கோபத்துடன் கூறினார்கள் பயணிகள். பயணிகளுடனான மோதலை கடத்தலாக திசைதிருப்பி பிரச்சினையை பெரிதாக்கிய பைலட்டுகள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்