முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க உயர்நிலைக் குழுமுடிவுக்கு ராம்ஜெத்மலானி கடும்எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 9 - பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு ஆதரவாக உயர்நிலைக் குழு எடுத்த முடிவுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நிதின் கட்காரியின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கட்காரி தலைவர் பதவியில் நீடிக்கலாம் என உயர்நிலை குழு எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இதன் மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்து பா.ஜ.க விலகி செல்கிறது. மேலும் உயர்நிலை குழுவின் இந்த செயலால் ஊழலுக்கு எதிரான என்னுடைய போராட்டம் தனிப்பட்ட போராட்டமாக மாறி உள்ளது. கட்சியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பூட்டு மூத்த தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நான் முக்கிய தலைவர் இல்லை. எனவே இது எனக்கு பொருந்தாது. இனிமேலும் கட்காரி விவகாரம் குறித்து நான் பேசப் போவதில்லை. ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து பா.ஜ.க விலகி செல்கிறது என கட்சியினரை எச்சரிக்கப் போகிறேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.கவும் கட்காரிக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியில் இருந்து விலகுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். கட்சி என்ன முடிவெடுத்தாலும் நான் கட்சியை விட்டு விலக போவதில்லை. கட்சியில் இருந்து கொண்டே தேவைப்பட்டால் தனியாக கூட ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்