முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடந்தது

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர், நவ.- - 19 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரலாறு காணாத கூட்டம் இருந்தது. முருகப்பெருமானின் 2 வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13 ந் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலை யாக சாலை பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்-பாள்க-ளுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. கந்தசஷ்டி விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்-சி-கால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபி-ஷே-கம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர் மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய மாலை 4.25 மணிக்கு கடற்கரை நோக்கி புறப்பட்டார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர்புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். ஆர்ப்பரித்து வந்த யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன் அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருக பெருமான் தன் வேலால் வதம் செய்தார். சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் சுற்றி வட்டமிட்டது. கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபம் சென்றடைந்தார். சினம் தணிந்த முருகனுக்கு, வள்ளி, தெய்வானை- அம்பாள்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு சாயாபிஷேகம் நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் கட்டிச் சென்றனர். சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்துநின்று சாமி கும்பிட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்-தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்-தன. மேலும் சூரசம்ஹார விழாவை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் 2 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்-செந்தூருக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டு இருந்தனர். இன்று (திங்கள்) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதி-யம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதி-காலை 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார். தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர். 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடைபெறும். 24ந் தேதி (சனிக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு, சுவா-மியும், அம்பாளும் வீதி உலா வந்து பின்னர் கோவிலை சேர்கின்றனர். விழா நாட்களில் இன்னிசை நிகழ்ச்சி, பாராயணம் போன்றவை கோவில் கலையரங்கில் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்