முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசி மிடில்டனை கவனித்த இந்திய நர்ஸ் திடீர் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச. 9 - இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் மர்மமாக மரணம் அடைந்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர், கோடீஸ்வரர்கள், அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களை பற்றிய விவரங்களை சேகரிக்க பத்திரிகைகள் பல வழிகளில் முயற்சி செய்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி இளவரசி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய லண்டன் பகுதியில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனைக்கு காலையில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாளிகைக்கு திரும்பினார்.

இந்நிலையில், கிங் எட்வர்ட் மருத்துவமனையை 2 பேர் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா சல்தானா என்பவர் ரிசப்ஷனில் இருந்துள்ளார். அவர் போனை எடுத்து பேசியுள்ளார். எதிர் முனையில் பேசியவர்கள் தங்களை ராணி எலிசபத் என்றும் இளவரசர் சார்லஸ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கேட் மிடில்டனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி விவரம் கேட்டுள்ளனர். அரசு குடும்பத்தினர் தான் பேசுவதாக நினைத்துக் கொண்டு, இளவரசியை கவனித்துக் கொண்டுள்ள நர்சுக்கு போன் அழைப்பை மாற்றி கொடுத்துள்ளார் ஜெசிந்தா. அந்த நர்சும் சிகிச்சை விவரம் பற்றி கூறியுள்ளார். ஆனால், போனில் பேசியவர்கள் உண்மையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், ஆஸ்திரேலியாவின் ரேடியோ ஜாக்கிகள்தான் எலிசபத் போலவும் சார்லஸ் போலவும் பேசியுள்ளனர் என்பதும் தெரிந்தது. இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போனில் போலியாக பேசிய ஆஸ்திரேலிய எப்.எம். ஜாக்கிகள் மெல் கிரீக் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் மறுநாள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், போனில் பேசிய நர்ஸ் ஜெசிந்தா வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. லண்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனை பற்றியும், நர்ஸ்கள் அளித்த தகவல் பற்றியும் கேத் மிடில்டனுக்கு அளித்த சிகிச்சை பற்றியும் ஆஸ்திரேலிய ரேடியோ ஜாக்கிகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பிரச்னை தொடர்பாகவே நர்ஸ் ஜெசிந்தா இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் லண்டனில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பேஸ் புக்கில் நூற்றுக்கணக்கானோர் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜாக்கிகள் கிரீக், மைக்கேல் இருவரும் வேலைக்கு வரமாட்டார்கள். நர்ஸ் ஜெசிந்தா இறந்த செய்தி மிகவும் சோகமானது. எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஜாக்கிகள் இருவரும் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்ா என்று பேஸ் புக்கில் ரேடியோ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நர்ஸ் ஜெசிந்தாவின் மரணத்திற்கு மருத்துவமனை தலைமை நிர்வாகி ஜான் லோப்த்ஹவுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் செயின்ட் ஜேம்ஸ் பேலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நர்ஸ் ஜெசிந்தா மரணம் அடைந்தது குறித்த தகவல் அறிந்து இளவரசர் வில்லியம்சும் இளவரசி கேட் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இறந்த ஜெசிந்தாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்