முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவை பிரதமராக்க தேர்தல்களப் பணியாற்றுங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதாவை நாட்டின் பிரதமராக்க தேர்தல் களப் பணியாற்ற வேண்டும் என்று இளைஞர் அணியினரை அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். 

ஜெயலலிதா எண்ணற்ற சாதனைகளை யாரும் எண்ணி பார்க்க முடியாத தொலைநோக்கு திட்டங்களை தந்திருக்கிறார். அவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் இளைஞர் அணியினருக்கு மூன்று நாள் பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மூன்றாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்தது. கட்சி பணிகள், தேர்தல் பணிகள், மக்கள் பணிகள், தேர்தல் யுக்தி, வாக்குச்சாவடி பணிகள், பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்தல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. 

நேற்று மூன்றாவது நாளாக தனி மனித மேம்பாடு, மக்கள் தொடர்பு, தலைமை பண்பு, உறவுகள் மற்றும் உணர்வுகள் வெற்றிக்கான யுக்திகள் என்ற தலைப்புகளில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. தலைமை கழக நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள், எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். தினசரி காலை முதல் மாலை வரை இந்த பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக நடந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த பயிற்சி முகாமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். 

இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா மூன்றாம் முறையாக முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை தந்திருக்கிறார். 25 ஆண்டுகளாக ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்து இந்த இயக்கத்தை கட்டுக்கோப்புடன் எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத இயக்கமாக நடத்தி வருகிறார். 

எம்.ஜி.ஆர். மறைந்தபோது இந்த இயக்கத்தில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். இன்று இந்த இயக்கத்தில் 1.50 கோடி தூய தொண்டர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை என்ற அளவுக்கு கட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.

வருங்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் வேண்டும். அதனை ஜெயலலிதா கொடுத்திருக்கிறார். நியாய விலை கடை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கி உணவு பாதுகாப்பு அளித்து வருகிறார்.

நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், ஏழை மக்களுக்கு இலவச சேலை, வேட்டி கிடைக்கும் வகையிலும் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார். இன்று 3 கோடியே 40 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி- சேலைகளை ஜெயலலிதா வழங்கி வருகிறார். 

ஏழைகளுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ருபாய் மதிப்பில் தரமான வீடுகளை கட்டி தருகிறார். சென்ற ஆண்டு 60 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 60 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.

இதுதவிர மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 33 ஆயிரத்து 750 ரூபாய் தருகிறது. மாநில அரசு 11 ஆயிரத்து 250 ரூபாய் தருகிறது. இந்த தொகையை வைத்து தரமான வீடு கட்ட முடியாது என்பதால் ஜெயலலிதா 66 ஆயிரத்து 750 ரூபாய் தருகிறார். மொத்தம் 1 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் 20 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறார். இதுபோன்று மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். 

ஜெயலலிதாவின் ஆட்சி முறையை தேசிய தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் உற்று நோக்குகிறார்கள். எந்த பிரச்சினையானாலும், எதிர்கட்சிகள் செயற்கையாக உருவாக்கிய பிரச்சினையானாலும், இயற்கையாக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டு நிவாரணம் தேடி தருபவர் ஜெயலலிதா. மற்ற மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள் அந்த பிரச்சினைகளை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார்கள். 

ஜெயலலிதாவின் திட்டங்களை பொருளாதார வல்லுனர்கள் நாட்டு பற்றுள்ளவர்கள் பாராட்டுகிறார்கள். மத்தியில் நிலையான அனைத்து திறமையும் கொண்ட நல்ல அரசு வரவேண்டும். சர்வ வல்லமை படைத்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த தகுதி இந்தியாவில் ஜெயலலிதாவுக்குதான் உண்டு. 

கருணாநிதி 13 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருக்கிறார். 5 ஆண்டு மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் பங்கு பெற்றிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் 8 ஆண்டு அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி தமிழகத்துக்கு எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் கருணாநிதி எதையும் செய்யவில்லை. தமிழக உரிமைகளைத்தான் விட்டு கொடுத்தார். 

டெல்லியில் வளமான துறைகளை பெற்றார். அதன் மூலம் தனது குடும்ப வளத்தை பெருக்கினார். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. 

இரு மாநில சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்போது உடனே அதனை தீர்த்து வைக்கும் வலிமையான பிரதமர் வரவேண்டும். ஜெயலலிதா பிரதமராக வந்தால் தான் சரியான தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். 

ஜெயலலிதாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அனைவரும் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நமது பணி என்ன? பார்லிமெண்ட் தேர்தலில் நமது களப்பணி எப்படி அமைய வேண்டும்? எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை பிரதமராக்க சூளுரைத்து களப் பணியாற்ற வேண்டும்.

நான் 1982 ஆம் ஆண்டு பெரியகுளம் நகர இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தேன். 10 ஆண்டுகள் கழித்து 1992 ஆம் ஆண்டில் நகர செயலாளர் ஆனேன். அதன் பின் மாவட்ட இளைஞர் அணி செ யலாளர் ஆனேன். பிறகு மாவட்ட செயலாளர் ஆனேன். பின் சட்டமன்ற உறுப்பினரானேன். கழக பொருளாளராக ஜெயலலிதா நியமித்தார். அமைச்சர் பொறுப்பையும் அளித்தார். எனவே நாம் அயராது உழைக்க வேண்டும். ஜெயலலிதா உரிய பொறுப்புகளை தருவார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், ரபி பெர்னாட் எம்.பி., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் பலர் பேசினார்கள்.

இளைஞர் அணி இணை செயலாளர்கள் கே.ஏ.கே.முகில், சதர்ன் பிரபாகர்,செவ்வை சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் அப்பு தீபக், பீமராவ், வெற்றிவேந்தன், முனிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago