முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து உயர்ந்தது எப்படி?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஏப்.18 - ஆந்திர மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.61 கோடி சொத்து 2ஆண்டில் ரூ.391 கோடியாக உயர்ந்தது எப்படி என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆந்திராவில் கடப்பா பாராளுமன்ற தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 8ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளின் முறையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பாக ஜெகன்மோகனும் மற்றும் அவரது தாயார் விஜயலெட்சுமியும் போட்டியிடுகின்றனர். தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்த ஜெகன்மோகன் ரெட்டி தனது சொத்து மதிப்பு ரூ. 391 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த முறை 2009ல் ஜெகன் போட்டியிட்டபோது தனது சொத்து மதிப்பு ரூ.61 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் குறுகிய காலத்தில் ரூ.61 கோடி சொத்து எப்படி ரூ.391 கோடிக்கு உயர்ந்தது எப்படி என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த தேர்தலில் இந்த சொத்து பிரச்சனையை முக்கிய விவாதமாக எடுதிதுக்கொண்டுள்ளனர். மேலும் ஜெகனுக்கு சொந்தமாக சாக்ஷி தொலைக்காட்சி, சாக்ஷி பத்திரிக்கை, இந்திரா தொலைக்காட்சி உள்ளிட்ட சொத்துக்களும் உள்ளன. இவற்றை குறித்து ஜெகன் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மேலும் ஜெகன் தனது பாரதி சிமெண்ட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இதன் மூலம் அவருக்கு ரூ.1,598 கோடி கிடைத்துள்ளது. இதனையும் அவர் மறைத்துவிட்டார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தெலுங்கு தேச கட்சியின் தலைவர்களில் ஒருவரான வரலாராமையா என்பவர் அளித்த பேட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் ஜெகனுக்கு ரூ. 450 கோடி மதிப்பிலுள்ள பங்களாக்கள் உள்ளன. இதனையும் அவர் மறைத்துவிட்டார் என்றார் அவர். தற்போதைய நிலவரப்படி ஆந்திராவில் கம்மம் தொகுதி தெலுங்கு தேச எம்.பி. நாகேஸ்வரராவ் தான் நாட்டிலேயே கோடீஸ்வர எம்.பி. யாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.173 கோடி. இவருக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் நவீன்ஜிந்தால் ரூ.131 கோடி. எல்.ராஜகோபால் ரூ.121 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரபுல் பாட்டீல் ரூ.89 கோடி. ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் வெற்றி பெற்றால் இவர்களை எல்லாம் மிஞ்சி முதலிடத்திற்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்