முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 19 - அழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி  நேற்று மதுரை வைகை ஆற்றில் இறங்கினார். 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர்.    வரலாற்றுச்சிறப்பு மிக்க மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். சைவ, வைணவ  ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த  திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவையும், அழகர்கோவில் திருவிழாவையும் ஒருங்கிணைத்து கொண்டாடப்படுகிறது. தனித்தனியாக நடந்து வந்த திருவிழாவை ஒருங்கிணைத்தது திருமலை நாயக்கர் மன்னர்தான். சிறப்பு மிக்க இந்த திருவிழா கடந்த 7ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டு சிறப்பாக நடந்து வந்தது.  மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடியும் தருவாயில் உள்ள நிலையில் அழகர் கோவில் சித்திரை திருவிழா முக்கிய கட்டத்தை வந்தடைந்தது.   சித்ரா பவுர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.  அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக சுந்தர்ராஜபெருமாள் கடந்த சனிக்கிழமை  மாலை 5.45 மணிக்கு அதிர் வேட்டுக்கள் முழங்க  கள்ளழகர் வேடம் பூண்டு  தங்கப்பல்லக்கில் மலையை விட்டு புறப்பட்டார். அப்போது  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைத்ததோடு, அழகர் வரும் வழியில் எல்லாம் பக்தர்கள் திரண்டு நின்று அழகரை தரிசித்தனர். மறுநாளான  காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி வந்தடைந்தார்.அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மாலை 5 மணிக்கு அவுட் போஸ்ட் வந்தார். அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் எழுந்தருளினார். இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் துவங்கியது.  அதிகாலை 2.30 மணிக்கு  தல்லாகுளம் கருப்பண சாமி கோவிலுக்கு வந்த அழகர் தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி அழகர் புறப்பட்டார்.  நேற்று (திங்கட்கிழமை)  சுந்தர்ராஜபெருமாள் எனும் அழகர் பெருமான் பச்சை பட்டு உடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து காலை 6.51 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றுக்குள் இறங்கினார். முன்னதாகவே வெள்ளி குதிரை வாகனத்தில் வந்திருந்த வீரராகவ பெருமாள்,அழகரை வரவேற்றார். பின்னர் அழகர் வைகை ஆற்றுக்குள் இருந்து புறப்பட்டு  பல்வேறு திருக்கண்களுக்கு சென்று பகல் 11.45 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கணக்கனோர்  தண்ணீரை பீய்ச்சி அடித்ததை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10  லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்ததால்  வைகை ஆற்றை பார்ப்பதற்கே அழகாக இருந்தது. வைகையில் தண்ணீர் வெள்ளமாக ஓடுவதை பார்த்தவர்களுக்கு நேற்று அழகர் திருவிழாவில் வைகையில் மக்கள் வெள்ளத்தை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. கள்ளழகர்   வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் மேளம் தாளம் முழங்க நகர் முழுவதும்  ஆடிப்பானர்.
    ராமராயர் மண்டபத்தில் இருந்து அழகர் மதியம் 3 மணிக்கு மேல் வண்டியூருக்கு புறப்பட்டு சென்றார். வழி நெடுக உள்ள திருக்கண்களில் எழுந்தருளி விட்டு,  இரவு 1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலை வந்தடைந்தார். இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த சேவையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகர் இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெறுகிறது. அதிகாலை மோகனாவதாரத்துடன் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார். 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார்.  அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago