முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களுக்காக வாலிபர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சங்கரன்கோவில், ஏப்ரல் 20 - சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது. இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்தார். பின்னர் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊரான சீகம்பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு வந்தும் தனது நண்பர்களிடம் இலங்கை தமிழர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே என்று கூறி அழுது புலம்பினார். 

நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற முயன்றனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உடனடியாக கிருஷ்ணமூர்த்தியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவே தகனம் செய்யப்பட்டது. 

நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதனை அவரது பெற்றோர் பார்த்தபோது அந்த கடிதத்தை கிருஷ்ணமூர்த்தியே எழுதியிருந்தது தெரியவந்தது. இதில் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார். 

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு தெரிவித்தனர். உடனடியாக அவர் நேற்று காலை சீகம்பட்டிக்கு விரைந்தார். அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது, 

நெல்லை மாவட்டம் குருவிகுளம் அடுத்த சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் போலீசார் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்ததை மறைத்து, அவரால் பேச முடியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிருக்கு போராடிய போது அவரது தாயார் சுப்புலட்சுமி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துள்ளது மிகப்பெரிய தியாகம். 

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை தலைவர் பான்கீமூன் நேரில் சென்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்க வில்லை. மேலும் ஐ.நா. சபையை இலங்கை படுகொலை குறித்து விசாரணை நடத்தி இது போர் குற்றம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் போர் நடக்கும் போது சர்வதேச விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதி போரில் விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. சபையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்து கொண்டுள்ளது.

சர்வதேச குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவுவது தலைகுனிவாக உள்ளது. இலங்கையுடனான உறவை இந்தியா முறித்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழர் படுகொலையில் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலையாவது கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழர் படுகொலைக்கு இந்தியா ஆதரவு என்ற நிலை ஏற்பட்டு விடும்.

சமீபத்தில் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்று கடலில் வீசியுள்ளனர். பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அங்குள்ள பொதுமக்களும், மீனவர்களும் ம.தி.மு.க.வின் உன்னத நிலையை பாராட்டினர். நான் தேர்தலில் ஏன் போட்டியிட வில்லை என்று யாரும் கேட்க வில்லை. இதன் மூலம் அரசியல் பொது வாழ்க்கையில் எங்களுக்கே வெற்றி. இவ்வாறு வைகோ பேசினார்.

 

 

தற்கொலை செய்த கிருஷ்ணமூர்த்தி எழுதிய உருக்கமான கடிதம்

 

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தின் விபரம் வருமாறு, 

அன்று ராமன் - ராவணன்

இன்று ராமன் - ராஜபக்சே

அன்று ராவணன் செய்த கொடூரமான செயலை இன்று சிங்களர்கள் செய்து விட்டனர். அவர்களுக்கும், இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பார்த்திருக்க வேண்டும். 

இலங்கையில் சிங்களர்களின் இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்று தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தனிநாடு ஒன்று ஒரு சிறப்பை பெற்று தர வேண்டும். அது வரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்க கூடாது. அப்படி பொறுப்பேற்றால் தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லி கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். 

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன். அப்பா, அம்மா, சீனி, தினகர் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இது தான். இதை நான் செய்யாவிட்டால் மிகப்பெரிய குற்றவாளி நான் தான். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்