முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் முன்னிலையில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் 1 -  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 3 பேர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். தமிழக கவர்னர் ரோசய்யா புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பள்ளி கல்வி, சட்டத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் ஆகியோர் பதவியிலிருந்து நேற்று முன்தினம்  நீக்கப்பட்டனர். 

இவர்களுக்கு பதிலாக வைகை செல்வன், டி.பி.னாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. வைகைசெல்வன் பள்ளிகல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.- டி.பி.னாட்சி கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராகவும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வீரமணி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் நேற்று  கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம்  எடுத்துக்கொண்டனர்.

ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த கவர்னர் ரோசய்யாவை முதலமைச்சர் ஜெயலலிதா ச்செண்டு அளித்து வரவேற்றார்.அதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்களை கவர்னருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தேசிய கீதத்தின் சுருக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது.  பின்னர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்ட தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அவர்களுடைய பெயர்களை வாசித்தார். இதையடுத்து புதிய அமைச்சர்கள் மூவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதற்குரிய உறுதிமொழிகளை புதிய அமைச்சர்கள் வாசித்து அதற்கான உறுதிமொழி படிவங்களில் கையெழுத்திட்டனர். பின்னர் முதலமைச்சரிடமும், கவர்னரிடமும் வாழ்த்துக்களை பெற்றனர்.

இதையடுத்து புதிய அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் கவர்னருடன்  சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவு பெற்றது.  அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் கவர்னர் மற்றும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட என்.ஆர்.சிவபதி, கோகுல இந்திரா, டாக்டர் விஜய் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, உறுப்பினர்கள், சென்னை மேயர் சைதை துரைசாமி,  துணை மேயர் பெஞ்சமின்,  வேலூர் மேயர் கார்த்தியாயினி,  ஜி.செந்தமிழன், அரசு கொறடா மனோகரன், தளவாய் சுந்தரம்,  அரசுத்துறை உயர் அதிகாரிகள்,  காவல்துறை உயர் அதிகாரிகள்,  அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான செ.கு.தமிழரசன் மற்றும் குமரி அருண் உள்ளிட்டோரும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

பதவிப்பிரமாணம் முடிந்து கோட்டைக்குச் சென்ற புதிய அமைச்சர்கள்  நேற்று  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று தங்கள் பொறுப்புகளை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட   அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்