முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலிருந்த 16 மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, மார்ச் 14 - இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்களை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மாணிக்கராஜ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த கென்னடி, மேன்ட்லி உட்பட 16 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் கடந்த 27ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து சுமார் 52 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீனவர்களை கடந்த 3ம் தேதி இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருவைகுளம் மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்த 16 மீனவர்களும் 9 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.தமிழக மீனவர்கள் 16 பேர் மற்றும் அவர்களது 3விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நேற்று மாலை இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து தமிழக கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீன்வளத்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து மீனவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 16 மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர்மல்க மகிழ்ச்சி ததும்ப வரவேற்றனர்.

இலங்கை சிறையில் இருந்து தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததன் காரணமாக மீனவர்கள் 16 பேரும் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்திந்து நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்