முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் மீது தாக்குதல்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.21 - புதுவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டும், பிரதமர், சோனியா ஆகியோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டமும் நடந்தது. புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 2 லட்சம் தமிழர்களை கொன்ற  இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு துணை நிற்கும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நகரெங்கும் சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டு இருந்தது. 

இதன் படி நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணா சிலை அருகே திரண்டு இருந்தனர். போராட்டத்திற்கு தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாலமுருகன், இளைஞர் அணி தலைவர் தீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளையும், சோனியாகாந்தியை பேய் போல சித்தரித்து வைத்திருந்த படத்தையும் எரித்தனர். இதை போலீசார் அணைக்க முயன்றனர். 

இதற்கிடையே ஒரு பிரிவினர் கம்பன் கலையரங்கில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் அலுவலகத்தை கல்வீசி தாக்கினர். கல்வீச்சில் அலுவலகத்தில் இருந்த அலங்கார கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் அலுவலக வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களையும் கீழே தள்ளி விட்டனர். இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட  100-க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்