முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கள ராணுவத்தால் காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

காரைக்கால், ஏப்.7 - நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்குதல், சிறை பிடித்தல் உள்ளிட்ட அட்டகாசங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மத்திய அரசு இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்தும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இலங்கை ராணுவத்தினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு:-

காரைக்கால் மேடு பகுதியில் இருந்து 4 மீனவர்கள் ஒரு படகில் சில நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அதேபோல காரைக்கால் பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்களும் 4 படகில் சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதை கண்டதும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 5 படகுகளையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பிறகு அதில் இருந்த 26 மீனவர்களையும் கடுமையாக திட்டி தாக்கினர். பின்னர் 26 மீனவர்களையும் சிறை பிடித்து இலங்கை கொண்டு சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த, தூரத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்த பிற மீனவர்கள் இது குறித்து காரைக்கால் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இலங்கை வீரர்களால் காரைக்கால் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மீனவர்களுக்கு தெரியவந்தது. இதனால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்த நிலையில் சோகத்துடன் உள்ளனர். 

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் காரைக்கால் மீனவர்களை சிறை பிடித்ததாக சிங்கள கடற்படை செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்