முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழறிஞர்களுக்கு விருதுகள்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று விருதுகளை வழங்கினார். மேலும் தமிழ் புத்தாண்டு புத்தக திருவிழாவையும் முதல்வர் துவக்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (15.04.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழுக்கு நற்தொண்டாற்றிவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு 2013-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினையும், கவிஞர் முத்துலிங்கத்திற்கு  கபிலர் விருதினையும், பேராசிரியர் ம.வே.பசுபதிக்கு உ.வே.சா விருதினையும், முனைவர் பால.ரமணிக்கு கம்பர் விருதினையும், முனைவர் ம.லோகநாயகிக்கு சொல்லின் செல்வர் விருதினையும் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  கடந்த 2012 -ஆம் ஆண்டில், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காத்து, தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றை போற்றி வளர்த்திடும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் / குழுமங்கள் போன்ற  அமைப்புகளை உருவாக்கி சிறப்பாக செயல்படச் செய்வதை  ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த்தாய் விருதினை ஏற்படுத்தினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று  தலைமைச் செயலகத்தில், இவ்வாண்டு (2013)க்கான தமிழ்த்தாய் விருதை இந்தியத் தலைநகராம் புதுடெல்லியில் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கி, விருதுக்கான தொகை 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஆர்.முகுந்தன், இணைச் செயலாளர்  பி.ராகவன் ஆகியோரிடம் வழங்கினார். 

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கபிலர் விருதை, மரபுச் செய்யுள் மற்றும் கவிதைப் படைப்புகளைப் புனைவதில் வல்லவரான  கவிஞர் முத்துலிங்கத்திற்கும், உ.வே.சா. விருதை, ஓலைச் சுவடிகள் அரிய கையெழுத்துப் படிகள் மற்றும் கிடைத்தற்கரிய நுால்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கும், இவ்வாண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கம்பர் விருதை, கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பி வரும் தமிழறிஞரான முனைவர் பால. ரமணிக்கும், சொல்லின் செல்வர் விருதை, சிறந்த இலக்கியப் பேச்சாளரான முனைவர் ம. லோகநாயகிக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விருதாளர்கள் ஒவ்வொருவரும் விருதுக்கான தொகை ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதிச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு  தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  தொடர்ந்து, சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்லுாரி வளாகத்தில் இரண்டு வார காலம் நடைபெறவுள்ள சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத்திருவிழாவினை காணொலிக் காட்சி  (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,  பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்  வைகைச்செல்வன், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் நுால் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமப் பொறுப்பாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்