முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்துக்களில் பலியான குடும்பத்திற்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - பல்வேறு சாலை விபத்துக்களில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே கடந்த 5 -ம் தேதி அன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அரசு பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்குளம் வட்டம், அருவிக்கரை கிராமம், மாத்தூர் திட்டங்கணவிளை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் ஜெஸ்டின் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மாத்தூர் கிராமம் அருகே நின்று கொண்டிருந்த ரவி என்பவர் மீது 10.4.2013 அன்று அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மல்லிகாபுரம் கிராமம், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் 12.4.13 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த உத்தரமேரூர் வட்டம் முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மகன் நேதாஜி பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

சென்னை, பாரிமுனை, பூக்கடை பேருந்து நிலையம் அருகே 12.4.13 அன்று கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளிக்கரணை நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் சிறுவன் பரத் மீது மோதியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த ஜெஸ்டின் ராஜ், ரவி,நேதாஜி மற்றும் சிறுவன் பரத் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர், வட்டம், மல்லிகாபுரம் கிராமம், உத்திரமேரூர் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் 12.4.13 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் முருக்கேரி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், சென்னை பாரிமுனை, பூக்கடை பேருந்து நிலையம் அருகே 13.4.13 ஏற்பட்ட சாலை விபத்தில் மங்கிலால், தியாகராஜன் மற்றும் முருகேசன் ஆகிய மூவர் காயமைடந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த ஜெஸ்டின் ராஜ், ரவி, நேதாஜி மற்றும் சிறுவன் பரத் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்