முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்களில் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு உதவி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.27 - சாலை விபத்துக்களில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு   முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அபிஷேகபுரம் கிராமம் அருகில் 22.4.2013 அன்று சென்னையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்து லாரி மீது மோதியதில், பேருந்து நடத்துநர் தங்கவேல், பேருந்தில் பயணம் செய்த  கணேசன் என்பவரின் மனைவி  செந்தில் ராணி, மோகன் என்பவரின் மனைவி சரவணி  ஆகியோர் சம்பவ இடத்திலேயும் மற்றும்  கோவிந்தராஞு என்பவரின் மனைவி பூமாரி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை கிராமம் அருகே  22.4.2013 அன்று சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் செளந்தர்ரா, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த பேருந்து நடத்துநர் தங்கவேல், செந்தில்ராணி, சரவணி,  பூமாரி மற்றும்  செளந்தர்ராஞு  ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அபிஷேகபுரம் கிராமம் அருகில் 22.4.2013 அன்று  சென்னையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்து லாரி மீது மோதியதில், பதினான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில்  உயிரிழந்த பேருந்து நடத்துநர் தங்கவேல், செந்தில்ராணி, சரவணி,  பூமாரி மற்றும்  செளந்தர்ராஞு ஆகியோரின் குடும்பங்களுக்கு  தலா  ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா 10,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்கண்டவாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்