முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்விரோதம் காரணமாக புதுவையில் குண்டு வீச்சு

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஏப்.30 - புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகரன்(28). மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் மணவாளன். இவர்கள் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்களும் நடந்து வந்தது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு மணவாளன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜசேகரன், குள்ள சரவணன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். 

ராஜசேகரன், குள்ள சரவணன் இருவரும் ஊருக்குள் நுழைய கலெக்டர் தடை விதித்து இருந்தார். இதையடுத்து ராஜசேகரன் கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை கிராமத்தில் உள்ள அவரது மைத்துனர் திருமுருகன் வீட்டில் தங்கி இருந்தார். 

அவருடைய மனைவி மற்றும் குழந்தையும் அவருடன் இருந்தனர். நேற்று காலை ராஜசேகரன் குளித்து விட்டு சாமி கும்பிட வீட்டில் தயாராக இருந்தார். அப்போது மணவாளன் ஆதரவாளர்கள் 3 பேர் திடீர் என்று அங்கு வந்து ராஜசேகரனை சரமாரியாக வெட்டினர். 

இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ராஜசேகரன் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ராஜசேகரன் தாக்கப்பட்ட சில நிமிடங்களில் மணவாளன் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் வம்பாகீரப்பாளையத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் நேராக ராஜசேகரன் வீட்டுக்கு சென்று நாட்டு வெடிகுண்டை வீசினர். 

பின்னர் அங்கிருந்து பல்வேறு இடங்களில் பிரிந்து சென்று அங்கும் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. ராஜசேகரன் வீடு மீது வெடிகுண்டு வீசியபோது அருகில் நின்றிருந்த அலிமாபீ(60) என்ற பெண் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த 3 பெண்கள் குண்டு சத்தம் கேட்டு மயங்கி விழுந்தனர். இன்னொரு குண்டு வீச்சில் ராமன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர்களும், மயக்கம் அடைந்தவர்களும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

வம்பாகீரப்பாளையத்தில் ராஜசேகரன் ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த குண்டு வீச்சு நடந்துள்ளதாக தெரியவருகிறது. குண்டு வீச்சு நடந்ததும் ராஜசேகரன் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் மணவாளன் வீட்டுக்கு சென்று வீட்டை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பர்வேஸ் அகமது, சூப்பிரண்டுகள் நாகராஜன், பைரவசாமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்